டல்லாஸ் : பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கிரிக்கெட் வரலாற்றிலேயே எந்த கேப்டனும் செய்யாத படுமோசமான விஷயம் ஒன்றை செய்திருக்கிறார். பாகிஸ்தான் அணி கடந்த சில ஆண்டுகளாக படுமோசமாக விளையாடி வருகிறது.
இந்த நிலையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கத்துக்குட்டி அணிகளான அயர்லாந்து, அமெரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்துள்ளது. இந்த நான்கு சிறிய அணிகளிடமும் தோல்வி அடைந்த ஒரே கேப்டன் என்ற மோசமான சாதனையை செய்து இருக்கிறார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம்.

2024 டி20 உலகக் கோப்பையில் அமெரிக்க அணியை சந்தித்தது பாகிஸ்தான் அணி. எப்படியும் பாகிஸ்தான் எளிதாக வெற்றி பெறும் என அனைவரும் நினைத்த நிலையில் அமெரிக்க அணி சூப்பர் ஓவர் வரை போட்டியை கொண்டு சென்று வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 159 ரன்கள் எடுத்தது. அமெரிக்க அணியும் போராடி 159 ரன்கள் எடுத்தது. 20 ஓவர்களின் முடிவில் இரண்டு அணிகளும் சரி சமமான ரன்கள் எடுத்திருந்ததால் போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதற்கு முன் 2022 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணியிடமும், 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் இடமும், 2024 உலகக் கோப்பைக்கு முன் நடந்த டி20 தொடரில் அயர்லாந்து அணியிடமும் பாபர் அசாம் தலைமையில் ஆடிய பாகிஸ்தான் அணி தோல்விகளை சந்தித்து இருந்தது.
அந்த மூன்று அணிகளிடமும் தோல்வி அடைந்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, தற்போது டி20 உலகக் கோப்பையில் அமெரிக்கா அணியிடமும் தோல்வியடைந்துள்ளது. இதைப் பார்த்து பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் நொந்து போயிருக்கிறார்கள்.
2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணியின் தோல்விகளுக்கு பாகிஸ்தான் நாட்டில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், இந்த முறை அந்த அணி மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லாததால் பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்ப்பை கூட தெரிவிக்கவில்லை. அந்த அளவுக்கு பாகிஸ்தானின் நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது.