ஃபுளோரிடா : பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், ஷாகித் அப்ரிடி மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோருக்கு என்று தனியாக 3 குரூப்-கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அமெரிக்கா அணி முதல்முறையாக சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்று கனவும் முடிவுக்கு வந்துள்ளது.

இதனால் 2007ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பின் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இடையிலான பிரச்சனையும் வெளியில் வந்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த பாபர் அசாம், உலகக்கோப்பை தொடருடன் பதவி விலகினார். இதன்பின் கேப்டனான ஷாகின் அப்ரிடி ஒரே தொடருடன் கேப்டன்சியில் இருந்து நீக்கப்பட்டார். இன்னொரு பக்கம் பாகிஸ்தான் அணியின் துணை கேப்டனாக இருந்த ரிஸ்வானுக்கு கேப்டன் பதவி கொடுப்பதை பற்றி எந்த விவாதமும் நடத்தப்படவில்லை.
இந்த சூழலில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டார். இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி மற்றும் ரிஸ்வான் ஆகிய மூவருக்கும் தனித்தனியாக குரூப்-கள் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வீரர்களுக்கு இடையில் ஈகோவும் எழுந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் சீனியர் வீரர்களான முகமது அமீர் மற்றும் இமாத் வாசிம் மீண்டும் அணியில் இணைந்ததும் அணியில் பிரச்சனையை எழுப்பியுள்ளது. இதனிடையே பாகிஸ்தான் அணி நிர்வாகிகள் மற்றும் வீரர்கள் 3 முக்கிய வீரர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித மாற்றமும் நடக்கவில்லை என்று தெரிய வருகிறது. இதுவே பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேற காரணமாக பார்க்கப்படுகிறது.