கிங்ஸ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் டி பிரிவில் நடைபெற்ற வங்கதேசம் மற்றும் நேபாள அணிகளுக்கு இடையேயான போட்டியில் வங்கதேசம் கடைசி நேரத்தில் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் வங்கதேச அணி சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி இடம் பெற்று இருக்கும் முதல் பிரிவில் நுழைந்தது.
இந்த போட்டியில் வென்றால்தான் சூப்பர் 8 சுற்றுக்கு எளிதாக முன்னேற முடியும் என்ற நிலையில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி தட்டுத் தடுமாறி விக்கெட்களை இழந்தது. வெறும் 106 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது வங்கதேசம்.

அதிகபட்சமாக ஷகிப் அல் ஹசன் 17 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களை எடுத்து ஆட்டம் இழந்து இருந்தனர். அடுத்து நேபாளம் 107 ரன்கள் என்ற இலக்கை சேசிங் செய்யத் தொடங்கியது. அந்த அணி முன்னதாக தென்னாப்பிரிக்காவை கடைசி ஓவர் வரை தவிக்க விட்டு ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்ததை நினைவுகூர்ந்த பலரும், இந்த போட்டியில் நேபாளம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதினர்.
ஆனால், 26 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தவித்தது நேபாளம். அப்போது குஷால் மல்லா மற்றும் தீபேந்திரா சிங் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்து வலுவான கூட்டணி அமைத்தனர். குஷால் மல்லா 17வது ஓவரில் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த குல்ஷன் ஜா டக் அவுட் ஆனார்.
கடைசி இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது நேபாளம். அப்போது 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசி இருந்த வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான் 19வது ஓவரை வீசினார். அனுபவ பவுலரான அவரது ஒரு பந்தை கூட தீபேந்திரா சிங்கால் அடிக்க முடியவில்லை. அந்த ஓவரின் கடைசி பந்தில் தீபேந்திரா சிங் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
போட்டியின் முக்கியமான கட்டத்தில் 19வது ஓவரை விக்கெட் மெய்டனாக வீசி அசர வைத்தார் முஸ்தாபிசூர் ரஹ்மான். கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் ஷகிப் அல் ஹசன் பந்து வீசினார். 20வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் நேபாள அணியின் கடைசி இரண்டு விக்கெட்களையும் சாய்த்தார் ஷகிப்.
பத்தொன்பதாவது ஓவரின் கடைசி பந்து மற்றும் இருபதாவது ஓவரின் முதல் இரண்டு பந்துகள் என வரிசையாக மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்களை இழந்து ஆல் அவுட் ஆனது நேபாள அணி. அந்த அணி 85 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதை அடுத்து வங்கதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சூப்பர் 8 சுற்றின் முதல் பிரிவில் வங்கதேச அணி இடம் பெற்றது. அதே பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஏற்கனவே இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.