தாகா: வங்கதேச அணியின் வேகப் பந்துவீச்சாளர் டஸ்கின் அஹமத் இந்திய அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன் தனது அறையை விட்டு வெளியே வராமல் இருந்ததாகவும், மற்ற வீரர்கள் அணியின் பேருந்தில் ஏறி மைதானத்திற்கு சென்றபோது அவர் ஹோட்டல் அறையிலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
அவர் தனது அறையில் நீண்ட நேரம் தூங்கி விட்டதாகவும், அதனால் அவர் பேருந்து புறப்படும் நேரத்திற்குள் வந்து சேரவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக டஸ்கின் அகமது ஆடவில்லை. அதே சமயம், அதற்கு அடுத்து நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்றார்.

இதை அடுத்து டஸ்கின் அகமது இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடாதது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியிருக்கிறது. இந்திய அணிக்கு எதிராக அவரை ஆட வைக்க வேண்டும் என பயிற்சியாளர் நினைத்து இருக்கலாம். ஆனால், அவர் அதிக நேரம் தூங்கிக் கொண்டு இருந்ததால் மைதானத்துக்கு நேரத்துக்கு வரவில்லை என்பதால் அவரை அணியை விட்டு நீக்கினாரா? அதனால் அந்தப் போட்டியில் வங்கதேசத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதா? என்கிற ரீதியில் இந்த சர்ச்சை கிளம்பி உள்ளது.
இது குறித்து வங்கதேச கிரிக்கெட் அமைப்பின் அதிகாரி ஒருவர் அந்த நாட்டின் ஊடகம் ஒன்றிற்கு அளித்த விளக்கத்தில், "டஸ்கின் அகமது அணியின் பேருந்தை விட்டுவிட்டு பின்னர் தாமதமாகவே மைதானத்திற்கு சென்றார் என்பது உண்மைதான். ஆனால், அந்தப் போட்டியில் அவர் ஏன் விளையாடவில்லை என்பதை பயிற்சியாளர் தான் கூற வேண்டும். இந்திய அணிக்கு எதிராக டஸ்கின் அகமதை விளையாட வைக்க வேண்டும் என்ற திட்டம் இருந்ததா? என்பதை அணியின் பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்காதான் சொல்ல வேண்டும்." என்றார்.
இதனால் அணியில் பிரச்சனை ஏற்பட்டதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், "அந்த போட்டியில் டஸ்கின் அகமது ஆடாததால் பயிற்சியாளருக்கும் அவருக்கும் இடையே ஏதேனும் பிரச்சனை வந்து இருந்தால், பின்னர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அவர் எப்படி விளையாடி இருக்க முடியும். டஸ்கின் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தாமதம் காரணமாக ஆடாததற்கு சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தான் சரியான நேரத்துக்கு வராததற்கு அவர் மன்னிப்பு கேட்டு விட்டார். அதனால், இதை பெரிய சர்ச்சையாக ஆக்க வேண்டாம்" என்றார்.
உலகக்கோப்பை போன்ற ஒரு முக்கியமான தொடரில் ஒரு வீரர் அதிக நேரம் தூங்கியதால் போட்டியில் ஆடவில்லை என்பது வேடிக்கையாகவும், அதே சமயம் அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் உள்ளது. வங்கதேச கிரிக்கெட் எந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கும் இதுவே ஒரு உதாரணமாக உள்ளது.