மும்பை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு பிசிசிஐ தரப்பில் கவுதம் கம்பீரை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக் காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைய உள்ளது. இதன்பின் ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பில் தொடர விரும்பாததால், அடுத்த பயிற்சியாளருக்கான தேடுதலில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின் இந்திய அணியின் பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா, ஸ்டீபன் பிளெமிங், ரிக்கி பாண்டிங், விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அதேபோல் கேகேஆர் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக வரவும் கூடுதல் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் பிசிசிஐ உயர்கட்ட நிர்வாகிகளின் பட்டியலில் கவுதம் கம்பீரின் பெயர் முதலிடத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் செயல்பட்ட 2 ஆண்டுகளும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதேபோல் கேகேஆர் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் அந்த அணியை மீண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இருந்து விலகியதோடு மட்டுமல்லாமல் அரசியலில் இருந்தும் விலகுவதாக கவுதம் கம்பீர் அறிவித்தார். இதன்பின் கேகேஆர் அணியின் ஆலோசகர் மற்றும் கிரிக்கெட் தொடர்புடைய விவகாரங்களில் ஆர்வமாக இருந்த கவுதம் கம்பீர், தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் குட் புக்கில் கவுதம் கம்பீர் இருப்பதால், தலைமை பயிற்சியாளருக்கான ரேசில் கவுதம் கம்பீர் முன்னிலையில் இருக்கிறார். இருப்பினும் கவுதம் கம்பீர் உடனான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு பின் நடக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.