சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பொறுப்பு தோனி வசம் வந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் 2024 டி20 உலக கோப்பையுடன் முடிவடைய உள்ளது.
அடுத்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது பிசிசிஐ. இந்த பதவிக்கு தகுதி உள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்றாலும், ஸ்டீபன் பிளெம்மிங் தான் அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்திய அணியை வழி நடத்த தகுதியான நபர் என பிசிசிஐ அதிகாரிகள் கருதுகின்றனர். இதற்காக அவரை அணுகிய போது அவர் பதவி ஏற்க மறுத்து விட்டார். இந்த நிலையில் தான் தோனி மூலம் பிளெம்மிங் மனதை மாற்றும் வேலைகள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அணி அடுத்த மூன்று ஆண்டுகளில் மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது. தற்போது இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஓய்வு பெறும் வயதை அடைந்து விடுவார்கள்.
இந்த நிலையில் அடுத்த கட்ட இளம் வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அந்த பணியை சிறப்பாக செய்து முடிக்கக் கூடிய நபர் ஸ்டீபன் பிளெம்மிங் தான் என பிசிசிஐ கருதுகிறது. அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 15 ஆண்டுகளாக சிறப்பாக வழி நடத்தி வருகிறார். குறிப்பாக இளம் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தேவையான ஊக்கத்தை அளித்து அவர்களை சிறந்த வீரர்களாக மாற்றி வருகிறார்.
அதற்கு சிறந்த உதாரணம் ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே போன்ற வீரர்கள் தான். இதை மனதில் வைத்து பிசிசிஐ பிளெம்மிங்கை அணுகியது. ஆனால், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமல்லாது, மேலும் மூன்று டி20 அணிகளுக்கு பயிற்சியாளராக இருக்கிறார். அந்த அணிகள் ஆடும் தொடர்களில் பங்கேற்கும் நேரம் போக, சுமார் ஆறு மாத காலம் தனது குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறார்.
ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளராக அவர் பதவி ஏற்றால் ஒரு ஆண்டில் பத்து மாதங்கள் இந்திய அணியுடன் அவர் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். ஐபில் தொடர் நடக்கும் இரண்டு மாதங்கள் மட்டுமே அவருக்கு ஓய்வு கிடைக்கும். இதை சுட்டிக்காட்டி அவர் இந்திய அணி பயிற்சியாளர் பதவியை மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் தோனி கூறினால் ஸ்டீபன் பிளெம்மிங் இந்திய அணியின் பயிற்சியாளராக வர ஒப்புக் கொள்வார் என பிசிசிஐ உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்; இது குறித்து தோனியிடம் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.