பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவாத நிலையில் தற்போது தொடரை விட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 8 சுற்று தற்போது விறுவிறுப்பாக வெஸ்ட் இண்டீஸ் இல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் குரூப் 2 பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற அணிகள் தகுதி பெற்றிருக்கிறது. இதனை குரூப் ஆஃப் டெத் என்று அழைப்பார்கள். அதாவது ஒரு போட்டியில் தோற்றால் கூட தொடரை விட்டு வெளியேறும் சூழலுக்கு தள்ளப்படலாம்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணியை எப்போதுமே ரசிகர்கள் சோக்கர்ஸ் என்று அழைப்பார்கள். தென்னாப்பிரிக்கா அணி இதுவரை எந்த ஒரு ஐசிசி தொடரையும் வெல்லாததற்கு இதுதான் காரணம். அப்படியே அவர்கள் நன்றாக விளையாடினாலும், மழை குறுக்கிட்டு அவர்களுடைய கதையையே முடித்துவிடும். இந்த நிலையில் தென்னாபிரிக்க அணி நடப்பு தொடரில் ஒருமுறை கூட தோற்கவில்லை.
இந்த சூழ்நிலையில் சூப்பர் 8 சுற்றில் குரூப் 2 பிரிவில் தென்ஆப்பிரிக்க அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று நான்கு புள்ளிகள் முதல் இடத்தில் இருக்கிறது. எனினும் தென்னாப்பிரிக்காவின் ரன் ரேட் 0. 62 என்ற அளவில் தான் இருக்கிறது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வி இரண்டு புள்ளிகள் என ரன் ரேட்டில் 1.81 என்ற நிலையில் இருக்கின்றது.
இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வி என இரண்டு புள்ளிகள் உடன் ரன் ரேட் 0.41 என்ற நிலையில் இருக்கிறது. அமெரிக்க அணி இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோற்று தற்போது நான்காம் இடத்தில் உள்ளது. இந்த சூழலில் தற்போது தென்னாபிரிக்க அணி முதலிடத்தில் இருந்தாலும் ஒரு தோல்வியை தழுவினாலும் தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
அதாவது நாளை இங்கிலாந்தும் அமெரிக்காவும் மோதுகிறது. இதில் இங்கிலாந்து அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. இப்படி நடக்கும் பட்சத்தில் தென்னாப்பிரிக்காவும் வெஸ்ட் இண்டீஸ்சும் மோதும் ஆட்டம் நாக் அவுட் ஆட்டம் போல் கருதப்படும். இதில் தென் ஆப்பிரிக்கா கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதி சுற்றுக்கு சென்று விடும் .