மும்பை : டி20 உலகக்கோப்பை தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடிய வீரர்களின் கணிப்பை ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார்.
நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ளது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடப்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா உள்ளிட்ட அணிகள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

லீக் போட்டிகளில் முக்கிய அணிகள் எளிதாக வென்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான கணிப்புகளை ஆஸ்திரேலியா ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் வெளியிட்டுள்ளார்.
அதில், இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடிய பவுலராக பும்ரா நிச்சயம் இருப்பார். பும்ரா எப்போதும் மிகச்சிறந்த வீரர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டை விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் அவருக்கு சிறந்த ஒன்றாக அமைந்துள்ளது. நிச்சயம் புதிய பந்தில் மேஜிக் செய்வார்.
ஐபிஎல் தொடரின் பும்ராவின் எகனாமி 7 ரன்களுக்கு கீழாக இருந்தது. அதேபோல் விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் கடினமான ஓவர்களாக கருதப்படும் ஓவர்களை தொடர்ச்சியாக வீசி இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் கடினமான ஓவர்களை வீசும் போது அதிக விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும். அதனால் பும்ராவை தேர்வு செய்கிறேன்.
அதேபோல் அதிக ரன்களை விளாசிய கூடிய வீரராக ட்ராவிஸ் ஹெட் இருப்பார் என்று கணிக்கிறேன். கடந்த சில ஆண்டுகளில் ரெட் பால், ஒயிட் பால் என்று அனைத்து வடிவங்களிலும் அசாத்தியங்களை நிகழ்த்திவிட்டார். தற்போது ட்ராவிஸ் ஹெட்டிடம் கொஞ்சம் கூட பயமே கிடையாது. ஐபிஎல் தொடரில் அவருக்கு சில ஏற்ற இறக்கங்கள் இருந்தன. அது அவருக்கும் நல்லதாக அமைந்தது. அதை அப்படியே ஆஸ்திரேலியா அணிக்கு செய்வார் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.