நியூயார்க்: இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் பந்து வீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் ரன் குவிக்க திணறினர். அது குறித்து பேசிய முன்னாள் வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் வக்கார் யூனிஸ் பாகிஸ்தான் வீரர்கள், பும்ராவை பார்த்து பயப்படுகிறார்கள் என அதிரடியாக கூறி இருக்கிறார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2024 டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் பும்ரா. அவர் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

அவரது அபாரமான பந்து வீச்சில் திணறிய பாகிஸ்தான் வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் அழுத்தத்தை சந்தித்தனர். அதன் காரணமாகவே வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த பாகிஸ்தான் அணி கடைசி ஆறு ஓவர்களில் ரன் குவிக்காமல் விக்கெட்களை இழந்து ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
குறிப்பாக ஒரு கட்டத்தில் யார்க்கர் வீச முயன்ற பும்ரா தவறுதலாக ஃபுல்டாஸ் பந்துகளை வீசினார். அதுபோல இரண்டு ஃபுல்டாஸ் பந்துகளை ஒரே ஓவரில் வீசினார். பொதுவாக கடைசி ஓவர்களில் ஃபுல்டாஸ் வீசினால் அதை எந்த ஒரு பேட்ஸ்மேனாக இருந்தாலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சி செய்வார்கள்.
ஆனால், பும்ரா வீசிய ஃபுல்டாஸ் பந்துகளில் கூட பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முயலவில்லை. இது குறித்து பேசிய வக்கார் யூனிஸ், பும்ராவை புகழ்ந்து தள்ளினார். "நான் பல ஜாம்பவான்களுடன் விளையாடி இருக்கிறேன். ஆனால், பும்ராவின் பந்துவீச்சு மிகவும் தனித்துவமானது. ஏன் பாகிஸ்தான் வீரர்களால் பும்ராவின் ஃபுல்டாஸ் பந்துகளை கூட அடிக்க முடியவில்லை? ஏனெனில் அவரது பெயரை கேட்டாலே அவர்களுக்கு இருக்கும் அச்சம்தான் காரணம். பும்ரா பேட்ஸ்மேன்களின் மனதில் பயத்தை விதைத்து இருக்கிறார். அவர் ஃபுல்டாஸ் வீசினால் கூட பேட்ஸ்மேன்களுக்கு அதை அடிக்க கடினமாக உள்ளது. ஏனெனில், அவர்கள் அதை எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்." என்றார்.
மேலும் பும்ரா குறித்து பேசிய வக்கார் யூனிஸ், "அவரது சாட்டை சுழற்றுவது போன்ற பந்து வீசும் முறை மற்றும் கைகளை எத்தனை தூரம் பின்னே கொண்டு சென்று வீச முடியுமோ அப்படி வீசுகிறார். அப்படி வீசும் பந்துகளை அடித்து ஆடுவது என்பது மிகவும் கடினம். பும்ரா ஒரு மேதை. அவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறப்பாக பந்து வீசக் கூடியவர். அவர் பந்துவீச்சில் அனைத்தையும் சரியாக செய்கிறார். அவர் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்" என்று வேகப்பந்துவீச்சு ஜாம்பவானான வக்கார் யூனிஸ் புகழ்ந்து பேசி இருக்கிறார்.