மும்பை: டி20 கிரிக்கெட் யுகத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ராவோ தனி பவுலராக பேட்ஸ்மேன்களையே ஆதிக்கம் செலுத்தி வருகிறார். டி20 உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற பும்ரா, இந்திய அணிக்காக ஐசிசி தொடரில் தொடர் நாயகன் விருதினை வென்ற முதல் பவுலர் என்ற சாதனை படைத்துள்ளார்.
இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் பும்ரா மொத்தமாக வீசியுள்ள 178 பந்துகளில் 110 டாட் பால்கள் என்பது தான் பிரமிக்க வைத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ராபர்ட்ஸ் பும்ராவிடம் பேசும் போது, நீ மட்டும் எங்களின் காலத்தில் இருந்திருந்தால், புதிய பந்தை வீசும் பவுலராக இருந்திருப்பார் என்று பாராட்டினார்.

வழக்கமாக அணியின் சிறந்த பவுலர் தான் புதிய பந்தில் பவுலிங் செய்ய அழைக்கப்படுவார்கள். இதன் மூலம் அந்த கால வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை விடவும் பும்ராவை சிறந்த பவுலர் என்ற ராபர்ட்ஸ் பாராட்டியது இந்திய ரசிகர்களுக்கு பெருமையளித்தது. ஏனென்றால் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் நாடுகளில் இருந்து வந்த பவுலர்கள் தான் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள்.
இந்தியாவில் இருந்து 3 வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் முதல் பவுலர் பும்ரா தான். அதிலும் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் செய்ய வரும் ஒவ்வொரு பேட்ஸ்மேன், பும்ராவின் பவுலிங்கில் தப்பிவிட வேண்டும் என்று போராடி வருகின்றனர். இதனை நிரூபிக்கும் வகையில் பும்ரா குறித்த புதிய ஸ்டாட்ஸ் ஒன்று தெரிய வந்துள்ளது.
2020ஆம் ஆண்டு முதல் தற்போது பவர் பிளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்களில் சிறந்த எகனாமியை வைத்துள்ள பவுலர்களின் பட்டியல் தெரிய வந்துள்ளது. அதன்படி பவர் பிளே ஓவர்களில் பும்ராவின் எகனாமி 4.39ஆக மட்டுமே உள்ளது. இவருக்கு பின் டிம் சவுதி எகனாமி 4.74ஆக உள்ளது. அதேபோல் மிடில் ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் இமாத் வாசிம் எகனாமி 4.31ஆகவும், தென்னாப்பிரிக்கா வீரர் நார்கியே எகனாமி 4.79ஆகவும், பும்ராவின் எகனாமி 4.85ஆகவும் உள்ளது.
அதேபோல் டெத் ஓவர்களில் பும்ராவின் எகனாமி 4.41ஆகவும், ஹசரங்கா எகனாமி 5.35ஆகவும் உள்ளது. அதாவது பவர் பிளே, மிடில் ஓவர்கள் மற்றும் டெத் ஓவர்கள் என்று 3 பட்டியலிலும் சிறந்த எகனாமியை கொண்டு இடம்பெற்றுள்ள ஒரே பவுலர் பும்ரா தான். மற்ற அனைத்து வீரர்களும் ஆட்டத்தில் ஒரு பகுதியில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இது பும்ரா மட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.