சென்னை : பிசிசிஐ தேர்வு குழுவினரால் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக முன்னாள் வீரர் பத்ரிநாத் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், நடராஜன், சாய் சுதர்சன், அஸ்வின் என்று எந்த தமிழ்நாடு வீரரும் தேர்வு செய்யப்படவில்லை. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சாய் சுதர்சன் 10 போட்டிகளில் விளையாடி 418 ரன்களை விளாசி இருக்கிறார். அதேபோல் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் 8 இன்னிங்ஸ்களில் கிடைத்த வாய்ப்பில் 262 ரன்களை விளாசி இருக்கிறார்.

மறுமுனையில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் 7 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இந்திய வீரர்களில் பும்ராவுக்கு பின் சிறந்த எகனாமி ரேட் நடராஜன் தான் வைத்திருக்கிறார்.
பவர் பிளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என்று டி20 கிரிக்கெட்டில் எந்த கட்டத்திலும் பவுலிங் செய்யும் அளவிற்கு நடராஜன் முன்னேறி இருக்கிறார். 2021ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலேயே நடராஜன் காயம் காரணமாக தேர்வு செய்யப்படவில்லை. தற்போது தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மோசமான ஃபார்மில் இருக்கும் அர்ஷ்தீப் சிங்கை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் பேசுகையில், இந்திய அணியில் 4 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டது ஏன்? இதுபோல் இன்னும் பல கேள்விகளும், சந்தேகங்களும் உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இருமடங்கு சிறப்பாக விளையாடி தங்களை நிரூபித்தால் மட்டுமே இந்திய அணியில் இடம் கொடுப்பேன் என்று பாரபட்சம் காட்டப்படுவது தொடர்ந்து வருகிறது. மற்ற மாநில வீரர்களுக்கு கிடைக்கும் ஆதரவு தமிழ்நாடு வீரர்களுக்கு கொஞ்சம் கூட கிடைப்பதில்லை.
இதனை கோபமாக சொல்கிறேன். ஏனென்றால் மும்பை, பஞ்சாப் போன்ற மாநில வீரர்களுக்கு கிடைப்பது போல் நமது வீரர்களுக்கு ஆதரவு கிடைப்பதில்லை. இதனால் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என்ற முறையில் சொல்கிறேன். ஏராளமான முறை இதே போன்ற சூழலில் சிக்கி தவித்திருக்கிறேன். இதுகுறித்து யாரும் பேசாத போது, நான் பேச வேண்டியதாக உள்ளது. அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய போது, ஒரு போட்டியில் சொதப்பினால் கேள்வி கேட்கிறார்கள்.
வெளிநாடுகளில் இப்போதும் பெஞ்ச் செய்கிறார்கள். இந்தியாவின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான முரளி விஜய், 2 இன்னிங்ஸ்களில் மோசமாக ஆடினால் கேள்விகள் 4 பக்கங்களில் இருந்தும் வருகிறது. இது தொடர்ந்து நடக்கிறது என்பதால் சொல்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து தேர்வு குழுவினர் இருந்திருக்கிறார்கள். அவர்களும் கேள்வி கேட்காமல் இருக்கிறார்கள். நிச்சயம் நடராஜன் டி20 உலகக்கோப்பை அணியில் இருந்திருக்க வேண்டும். அர்ஷ்தீப் சிங், கலீல் அஹ்மத் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட நடராஜன் இல்லை என்று ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
அதேபோல் நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத் குமார், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில், சிறந்த வேகப்பந்து வீச்சாளரும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடராஜன் அவர்களின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. வாய்ப்பு இருப்பின் அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்யலாம் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.