மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள கேப்டன் ரோகித் சர்மா ஆல் ரவுண்டர்கள் அதிக அளவு பந்து வீச வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில் இந்திய அணியின் இரண்டாவது வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக சிவம் துபே இருக்கிறார்.

இவர் சிஎஸ்கே அணிக்காக மிகவும் சிறப்பான முறையில் பேட்டிங் செய்தார். எனினும் டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து சிவம் துபே தடுமாறினார். பயிற்சி ஆட்டத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பந்துவீச்சில் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். இந்த நிலையில் சிவம் துபேவை இந்திய கிரிக்கெட் அணி ஜாம்பவான் கபில் தேவுடன் ஒப்பிட்டு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர் சிவம் துபே கடுமையாக உழைத்து வருகிறார். ஐபிஎல் தொடர் முழுவதும் கடின முயற்சியை மேற்கொண்டார். அவர் பேசுவது போல் நிச்சயமாக பந்து வீசினால் அவர் ஒரு கபில்தேவ் போன்ற வீரராக இருப்பார். ஐபிஎல் தொடரில் பல ஆல் ரவுண்டர்கள் நமக்கு நிச்சயம் கிடைப்பார்கள். எனினும் இம்பேக்ட் பிளேயர் விதியால் ஆல்ரவுண்டரின் பங்களிப்பு குறைந்து வருகிறது.
சிவம் துபேவின் பந்துவீச்சு வேகம் தற்போது குறைந்து இருக்கிறது. எனினும் அவர் கட்டர் பந்து, பந்தின் வேகத்தை மாற்றும் திறன் போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார். அதை வைத்து நிச்சயம் அவர் ஆட்டத்தில் பங்களிப்பை செலுத்த முடியும்.
நிச்சயமாக ஒரு ஆல்ரவுண்டர் பணியை சிவம் துபேவால் செய்ய முடியும். அதற்கு ஏற்றார் போல் அவர் உழைத்திருக்கிறார் என்று பிளமிங் கூறியுள்ளார். சிவம் துபே இதுவரை இந்திய அணிக்காக 21 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.