கராச்சி : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மனநல பயிற்சியாளராக கடந்த சில ஆண்டுகளாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்த டேவிட் ரெய்ட்-ஐ பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. சிஎஸ்கே அணியின் 2023 ஐபிஎல் கோப்பை வெற்றியில் டேவிட் ரெய்ட் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கேரி இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த போது தான், இந்தியா 2011 உலகக்கோப்பையை வென்றது. தங்கள் அணியையும் கேரி கிர்ஸ்டன் உலகக்கோப்பை வெல்ல வைப்பார் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் அணி அவரது தலைமையில் 2024 டி20 உலக கோப்பை தொடரை சந்திக்க உள்ளது.

இந்த நிலையில் கேரி கிர்ஸ்டன் சில உதவி பயிற்சியாளர்களை நியமிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு பரிந்துரை செய்துள்ளார். அதில் ஒருவர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மனநல பயிற்சியாளராக செயல்பட்டு வரும் டேவிட் ரெய்ட். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமில்லாமல் மெல்போன் ஸ்டார்ஸ் என்ற ஆஸ்திரேலிய டி20 அணி மற்றும் எஸ்சென்டன் கால்பந்து அணி ஆகியவற்றின் மனநல பயிற்சியாளராகவும் இருக்கிறார். அது மட்டுமின்றி ஒலிம்பிக் வீரர்களுக்கும் இவர் மனநல பயிற்சியாளராக செயல்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் டேவிட் ரெய்ட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு தங்கள் அணியின் மனநல பயிற்சியாளராக நியமித்து இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமாக செயல்பட்டு வரும் நிலையில் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், டேவிட் ரெய்ட் போன்ற அனுபவ மனநல பயிற்சியாளர் தேவை எனக் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மொஹ்சின் நக்வி கூறுகையில், "தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனின் பரிந்துரையின் பேரில் தகுதிவாய்ந்த மனநல மருத்துவராக ஏறக்குறைய இருபது ஆண்டு கால அனுபவமிக்க நிபுணரான டேவிட் ரீடை பாகிஸ்தான் அணியில் கொண்டு வந்துள்ளோம்." என்றார்.
மேலும், "செயல்பாடு மற்றும் செயல்திறன் இரண்டையும் மேம்படுத்துவதில் அவரது நிபுணத்துவத்துடன், எங்கள் வீரர்கள் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சிறப்பாக செயல்படத் தேவையான விரிவான கவனிப்பைப் பெறுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் கூறி இருக்கிறார்.