மும்பை : 2024 டி20 உலகக்கோப்பை இன்னும் இரண்டு மாதங்களில் துவங்க உள்ள நிலையில் இந்திய டி20 அணியின் விக்கெட் கீப்பர் யார் என்பதில் இன்னும் குழப்பம் நீடித்து வருகிறது.
கடைசியாக நடந்த தென்னாப்பிரிக்க டி20 தொடர் மற்றும் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ஜிதேஷ் சர்மா இந்திய டி20 அணியில் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். மற்றொரு டி20 அணி விக்கெட் கீப்பரான இஷான் கிஷன் அணி நிர்வாகத்தின் அதிருப்தியில் சிக்கி இருப்பதால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜிதேஷ் சர்மாவை தவிர்த்து வேறு ஒரு மாற்று விக்கெட் கீப்பரை இந்திய அணி நிர்வாகம் தேடி வருகிறது. ரிஷப் பண்ட் பல மாதங்களுக்கு பின் கிரிக்கெட் போட்டிகள் ஆட இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடரில் அவர் ஆடுவது உறுதியாகி இருக்கிறது. ஆனாலும், அவர் ஐபிஎல் தொடரில் ஆடி முடித்து விட்டு ஓய்வே இல்லாமல் அதைத் தொடர்ந்து நடக்கும் 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா? நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடாமல் இருந்த அவரது உடல் அதற்கு ஒத்துழைக்குமா? என்பது கேள்விக் குறியே.
இந்த நிலையில் தான், சமீபத்தில் டெஸ்ட் அணியில் வாய்ப்பு பெற்று தன்னை நிரூபித்த இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் துருவ் ஜுரேலை குறி வைத்து இருக்கிறது கேப்டன் ரோஹித் சர்மா - பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூட்டணி.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது துருவ் ஜுரேல் மீது நம்பிக்கையற்று இருந்த கேப்டன் ரோஹித் சர்மா, அரை மனதாகவே அவரை அணியில் சேர்க்க ஒப்புக்க கொண்டதாகவும், ஆனால், அவரது அபார விக்கெட் கீப்பிங் திறன் மற்றும் பேட்டிங் திறனை பார்த்து வியந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, அவரை டி20 அணியிலும் சேர்க்க இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. 2024 ஐபிஎல் தொடரின் முதல் பகுதியில் துருவ் ஜுரேல் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மே 1 அன்று அறிவிக்கப்பட உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் துருவ் ஜுரேல் பெயர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.