மும்பை: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு ஆதரவு அளித்து அந்த அணி வெற்றி பெற வேண்டும் என நினைத்ததாக இளம் வீரர் துருவ் ஜுரேல் தெரிவித்து இருக்கிறார். அவரது பேச்சு அதிர வைக்கும் ஒன்றாக இருந்த போதும், இதில் வேடிக்கையான ஒரு விஷயமும் உள்ளது.
2024 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி ஒரு கட்டத்தில் வெற்றி பெறுவது போன்ற நிலைக்கு வந்தது. 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அப்போது துருவ் ஜுரேல், தான் தென்னாப்பிரிக்கா இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என நினைத்ததாகவும், அவர்களை ஆதரித்ததாகவும் கூறினார்.

அதாவது தான் முதலில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என நினைத்ததாகவும், அப்போது தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறுவது போன்ற நிலைக்கு வந்ததாகவும், அதன் பின் தான் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற வேண்டும் என நினைத்ததாகவும், அதன் பின் இந்திய அணிக்கு சாதகமாக போட்டி மாறியதுடன், இந்திய அணி வெற்றியும் பெற்றது எனக் கூறி இருக்கிறார்.
துருவ் ஜுரேல் எந்த அணிக்கு ஆதரவளிக்கிறாரோ அந்த அணி தோல்வி அடைவது போல சென்றதால், தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆதரவு அளித்து அந்த அணியை தோற்கடித்து இருக்கிறார். இந்த வேடிக்கையான விஷயத்தை அவர் தற்போது பகிர்ந்து கொண்டார்.
அதே போல, இந்தியா - தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டியை பார்த்த மற்றொரு இளம் வீரர் அபிஷேக் ஷர்மா, அது குறித்து தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் உடன் ஒன்றாக அமர்ந்து இறுதிப்போட்டியை பார்த்ததாகவும், இந்தியா வெற்றி பெற்றவுடன் யுவராஜ் சிங் கலங்கியதாகவும், அதை பார்த்து யுவராஜ் சிங் போலவே தானும் இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்று கொடுக்க வேண்டும் என உறுதி கொண்டதாகவும் கூறி இருக்கிறார் அபிஷேக் ஷர்மா.