நியூயார்க் : இந்திய டி20 அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா சக வீரரான சுப்மன் கில் முன் தண்ணீர் பாட்டிலை மரியாதை இல்லாமல் வீசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
2024 டி20 உலக கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடியது. அந்தப் போட்டியின் போது பவுண்டரி எல்லை அருகே நின்ற ஹர்திக் பாண்டியாவுக்கு சுப்மன் கில் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார். சுப்மன் கில் மாற்று வீரராக மட்டுமே இந்திய அணியில் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதனால், அவர் இந்திய வீரர்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் வேலையை செய்து வந்தார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு அவர் தண்ணீர் கொடுத்தார். தண்ணீரை குடித்து முடித்தவுடன் ஹர்திக் பாண்டியா அந்த பாட்டிலை சுப்மன் கில் கையில் கொடுக்காமல் தூக்கி வீசினார். தன்னிடம் பாட்டிலை கொடுப்பார் என எதிர்பார்த்து கையை நீட்டிக்கொண்டு காத்துக் கொண்டிருந்தார் சுப்மன் கில். ஆனால், ஹர்திக் பாண்டியா பாட்டிலை கீழே வீசியதை கண்ட சுப்மன் கில் ஒரு நிமிடம் திகைத்துப் போனார்.
இந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பலரும் ஹர்திக் பாண்டியா தலைக்கனத்துடன் நடந்து கொள்கிறார், மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறார் என இந்த வீடியோவின் கீழ் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதால் ரோஹித் சர்மா ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வீடியோ ரோஹித் சர்மா ரசிகர்கள் மத்தியில் தான் வேகமாக பரவி வருகிறது. ஆனால், உண்மையில் ஹர்திக் பாண்டியா மரியாதை இல்லாமல் நடந்து கொள்ளவில்லை என வேறு சிலர் கூறியதோடு உண்மையில் அங்கு என்ன நடந்தது என முழு வீடியோவையும் வெளியிட்டனர்.
ஹர்திக் பாண்டியா பாட்டிலை கீழே தூக்கி வீசிய பின், சுப்மன் கில்-லிடம் பாட்டிலை அப்படியே விட்டுவிட்டு செல்லவும். எனக்கு மீண்டும் தண்ணீர் வேண்டுமென்றால் நானே இந்த பாட்டிலை எடுத்துக் கொள்கிறேன் என கூறுவது அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. எனவே, ஹர்திக் பாண்டியா மரியாதை இல்லாமல் நடந்து கொள்ளவில்லை. மாறாக சுப்மன் கில் பாட்டிலை தூக்கிக்கொண்டு அலைய வேண்டாம் என்பதற்காகவே பாட்டிலை தனக்கு அருகே வீசி இருக்கிறார் என விளக்கம் அளித்து உள்ளனர்.