மும்பை : விராட் கோலியை இந்திய டி20 அணியில் சேர்க்க வேண்டாம் என தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரிடம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாகவும், அஜித் அகர்கர் தன் சக தேர்வுக் குழு உறுப்பினர்களை சம்மதிக்க வைக்க வேண்டும் என ஜெய் ஷா கூறி இருந்ததாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
சத்ய பிரகாஷ் என்ற பத்திரிக்கையாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்த தகவலை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியை சேர்க்கப் போவதில்லை என சில நாட்கள் முன்பு செய்தி பரவியது. இந்த நிலையில் அது குறித்தே தற்போது கீர்த்தி ஆசாத் இந்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
விராட் கோலி டி20 போட்டிகளில் சுழற் பந்துவீச்சாளர்களின் பந்துகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிப்பதில்லை என்ற விமர்சனம் உள்ளது. அதை வைத்தே அவரை 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யக் கூடாது என தேர்வுக் குழு முடிவு செய்ததாக ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளியான நிலையில், அதை சொன்னதே ஜெய் ஷா தான் என இந்த பதிவில் கூறப்பட்டு இருக்கிறது.

ஜெய் ஷாவின் கருத்தை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், மேலும், கேப்டன் ரோஹித் சர்மாவிடம் ஜெய் ஷா பேசியதாகவும், அப்போது ரோஹித் சர்மா, என்ன நடந்தாலும் சரி விராட் கோலி டி20 அணியில் இடம் பெற வேண்டும் என கூறியதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கீர்த்தி ஆசாத் தனது பதவில், ஜெய் ஷா அணித் தேர்வில் தலையிடுவதை சுட்டிக் காட்டி இருக்கிறார்.
கீர்த்தி ஆசாத் பகிர்ந்துள்ள இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்து தெரியவில்லை என்றாலும், விராட் கோலி டி20 அணியில் நிச்சயம் இடம் பெறுவார் என்றே பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே மாதம் 1ஆம் தேதி 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான உத்தேச அணி அறிவிக்கப்பட உள்ளது. அப்போது நிச்சயம் விராட் கோலி பெயர் அதில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.