மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் ஷகிபுல் ஹசன் மோசமான ஷாட் ஆடி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் சேவாக் சாகிபுல் ஹசனை கடுமையாக சாடினார். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்கள் மனதில் என்ன பெரிய கில்கிறிஸ்ட், ஹைடன் என்று நினைப்பா? வங்கதேச வீரருக்கு என்ன வருமோ அதை போல் விளையாடுங்கள் என்று கேவலமாக பேசினார்.

இந்த நிலையில் ஷஹிபுல் ஹசன் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 46 பந்துகளில் ஷகிபுல் ஹசன் 64 ரன்கள் அடித்தார். இதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சேவாக் உங்களை கடுமையாக விமர்சித்தாரே அதற்கு இப்போது நீங்கள் என்ன பதில் சொல்ல போகிறீர்கள் என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு யார் கேள்வி கேட்டது என்று ஷகிபுல் ஹசன் கூறினார். உடனே இதனை ஊடகங்கள் தவறாக சித்தரித்து விட்டதாக வங்கதேச ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்தது யார் என்று தான் கேட்டாரே தவிர சேவாக் யார் என்று ஷகிபுல் ஹசன் கேட்கவில்லை என்றும் வங்கதேச ரசிகர்கள் பதிலளித்துள்ளனர்.
மேலும் சேவாக்கின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த ஷகிபுல் ஹசன், ஒரு வீரர் மற்றவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக விளையாட கூடாது. ஒரு வீரரின் முக்கிய பணி அணியின் வெற்றிக்காக தான் விளையாட வேண்டும். பேட்ஸ்மேனாக இருந்தால் ரன் குவிக்க வேண்டும். பவுலராக இருந்தால் பந்து வீச வேண்டும்.
அதுவே ஒரு ஃபீல்டராக இருந்தால் எவ்வளவு கேட்ச் பிடிக்க முடியுமோ அவ்வளவு பிடிக்க வேண்டும். எத்தனை ரன்கள் தடுக்க முடியுமோ அதனை தடுக்க வேண்டும். அப்படி அந்த வீரரால் அணியின் வெற்றிக்கு பங்களிக்க முடியவில்லை என்றால் நிச்சயம் பல்வேறு விவாதங்கள் விமர்சனங்கள் எழ தான் செய்யும். அதனை நான் என்றுமே தவறாக நினைத்தது கிடையாது என்று பதிலளித்திருக்கிறார். ஆனால் நம்மவர்கள் சேவாக்கை ஷகிபுல் ஹசன் கேவலமாக பேசி விட்டார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.