லாகூர் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று கடந்த ஜூன் இரண்டாம் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 8 அணிகள் தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் சென்றிருக்கின்றன.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஒரு பிரிவாகவும், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் மற்றொரு பிரிவாகவும் தங்களுக்குள் மோதுகின்றன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் நியூசிலாந்து போன்ற அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறி இருப்பது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் இணையதளத்தில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அதில் அமெரிக்க அணி அரசியல் காரணங்களுக்காக வெஸ்ட் இண்டீஸ் செல்லாது.
இதனால் அமெரிக்க அணி தொடரை விட்டு வெளியேறி விட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்றும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் ரசிகர்களை குழப்பம் அடைய செய்திருக்கிறது. ஆனால் இது முற்றிலும் தவறான தகவல். அப்படி எந்த ஒரு சம்பவமும் இதுவரை நடைபெறவில்லை.
கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் டி20 உலக கோப்பை அமெரிக்காவில் நடைபெற்றது. தற்போது அமெரிக்க அணி சூப்பர் 8 க்கு தகுதி பெற்றிருப்பது வரலாற்று சம்பவமாக பார்க்கப்படும் நிலையில் இதனால் அமெரிக்கா ஏன் வெளியேறப் போகிறது. ஆனால் இது போல் அரசியல் காரணங்களுக்காக பல்வேறு விளையாட்டுகளில் பல்வேறு அணிகள் வெளியேறியிருக்கும் சம்பவங்கள் நடந்திருக்கிறது.

ஆனால் இந்த டி20 உலக கோப்பையில் இப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. இதனால் இது பொய் என்பது குறிப்பிடத்தக்கது. எப்படி 2003 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் ரிக்கி பாண்டிங் ஸ்ப்ரிங் பேட்டை வைத்து ஏமாற்றி விட்டார். இதனால் இறுதிப்போட்டி மீண்டும் நடத்தப்பட போகிறது என்று 90ஸ் கிட்ஸ்-ஐ ஏமாற்றினார்களோ, அதேபோல் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களையும் ஏமாற்றும் படலம் நடைபெறுகிறது.