மும்பை : பாகிஸ்தான் அணியுடன் இருந்து நேரத்தை வீணடிப்பதை விட்டுவிட்டு இந்திய அணிக்கு மீண்டும் பயிற்சியாளராக வாருங்கள் என்று கேரி கிறிஸ்டனுக்கு இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடங்கி முகமது அமீர் வரை அனைவரையும் ரசிகர்கள் பொளந்து கட்டி வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், பாகிஸ்தான் அணியில் கொஞ்சம் கூட ஒற்றுமையே இல்லை.

அவர்களை அணி என்று அழைப்பதே அதிர்ச்சியாக உள்ளது. அது ஒரு அணியே அல்ல. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இல்லை. என் வாழ்க்கையில் நான் பல அணிகளுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இதுபோன்ற ஒரு சூழலை எந்த அணியிலும் பார்த்ததே இல்லை. ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு திசைக்கு செல்கிறார்கள் என்று விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேபோல், சர்வதேச போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டுமென்றால் ஃபிட்னஸ் மற்றும் திறமையை முன்னேற்ற வேண்டும். அதேபோல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். மற்ற அணிகளுடன் ஒப்பிடும் போது ஃபிட்னஸில் நாம் மிகவும் கீழ் இருக்கிறோம். இனி வரும் தொடர்களில் ஃபிட்னஸை முன்னேற்றம் காணும் வீரர்களுக்கு அணியில் இடம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு அணியின் பயிற்சியாளரே இப்படி வெளிப்படையாக விரக்தியை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கேரி கிறிஸ்டனுக்கு இந்திய ஜாம்பவான் ஹர்பஜன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். அந்த பதிவில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் கேரி கிறிஸ்டன்.
மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வாருங்கள். அரிதான வைரங்களில் முக்கியமான வைரம் தான் கேரி கிறிஸ்டன். சிறந்த பயிற்சியாளர், ஆலோசகர், நேர்மையாளர் மற்றும் 2011 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் விளையாடிய அத்தனை வீரர்களுக்கும் சிறந்த நண்பர். எங்களின் வின்னிங் கோச் தான் கேரி கிறிஸ்டன்.. ஸ்பெஷலான வீரர் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளருக்கான தேடல் தொடர்ந்து வரும் சூழலில், ஹர்பஜன் சிங் மீண்டும் கேரி கிறிஸ்டனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஐபிஎல் தொடரிலும் டெல்லி, ஆர்சிபி, குஜராத் உள்ளிட்ட அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் கேரி கிறிஸ்டனுக்கு உள்ளது. இதனால் மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளர் பணிக்கு கேரி கிறிஸ்டன் திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.