நியூயார்க்: இந்திய அணியில் இருந்து சிவம் துபே-வை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறி இருக்கிறார். 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் சிவம் துபே ஆல் -ரவுண்டராக இடம் பெற்று இருக்கிறார்.
அயர்லாந்து அணிக்கு எதிரான குரூப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சிவம் துபே இடம் பெற்றார். சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால் மாற்று விக்கெட் கீப்பராக வெளியே அமர வைக்கப்பட்டார். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக இந்திய அணியில் இடம் பெற்று ஆடினார். அந்தப் போட்டியில் சிவம் துபே பந்து வீசவில்லை. மேலும், பேட்டிங்கிலும் அவருக்கு கடைசி நேரத்தில் தான் வாய்ப்பு கிடைத்தது. அவர் 2 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார்.

இந்த நிலையில் சிவம் துபே-வை விட சஞ்சு சாம்சன் பேட்ஸ்மேன் ஆக இந்திய அணிக்கு அதிக உதவியாக இருப்பார் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறி இருக்கிறார். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் என முதல் நான்கு இடங்களில் வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எனவே, ஐந்தாவது இடத்திலும் வலுவான பேட்ஸ்மேன் ஒருவரை ஆட வைக்க வேண்டும் என்பதால் சஞ்சு சாம்சனை அந்த இடத்தில் ஆட வைக்க வேண்டும் என கூறி இருக்கிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
சிவம் துபே ஐந்தாவது வேகப் பந்துவீச்சாளராகவே பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருக்கிறார். அவரது பந்துவீச்சை இந்திய அணி பயன்படுத்துவது அரிது. எனவே, அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சனை அந்த இடத்தில் களம் இறக்கலாம் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறினார்.
இது பற்றி அவர் கூறுகையில், "சிவம் துபே பந்து வீசப் போவதில்லை என்றால் சஞ்சு சாம்சன் அவரைவிட சிறப்பான பேட்ஸ்மேன் ஆக விளையாடுவார். அவரை களம் இருக்கலாம். சஞ்சு சாம்சன் மிகவும் முதிர்ச்சியுடன் இருக்கிறார் என நான் நம்புகிறேன். சஞ்சு சாம்சன் தற்போது சிறந்த வடிவத்தில் இருக்கிறார். எனவே, இப்போது அவரை சர்வதேச அளவில் இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.