பார்படோஸ்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இரண்டாவது பிரிவில் மட்டும் கடினமான அணிகள் இடம் பெற்றுள்ளன. அந்தப் பிரிவில் இடம் பெற்று இருக்கும் முக்கிய அணிகளான வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்றில் ஒரு அணி நிச்சயம் அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்திய அணி இடம் பெற்று இருக்கும் முதல் பிரிவில் ஆஸ்திரேலியா மட்டுமே கடினமான அணியாகும். முதல் பிரிவில் ஆப்கானிஸ்தான் அணி இடம் பெற்றுள்ளது. மற்றொரு இடத்தில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து இடம் பெறும். முதல் பிரிவில் எப்படியும் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா முதல் இரண்டு இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாரபட்சத்தை சுட்டிக்காட்டி, இந்திய அணிக்கு சாதகமாக சூப்பர் 8 சுற்றின் பிரிவுகளை திட்டமிட்ட சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை பிற அணிகளின் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. முதலில் குரூப் சுற்று நடைபெற்றது. ஒவ்வொரு குரூப்பிலும் ஐந்து அணிகள் என மொத்தம் நான்கு குரூப்கள் இடம் பெற்றன. ஒவ்வொரு குரூப்பிலும் இடம் பெற்று இருக்கும் ஒரு அணி மற்ற நான்கு அணிகளுடன் மோத வேண்டும். ரவுண்டு ராபின் முறையில் நடைபெறும் இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் அதிக வெற்றிகளை பெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வகையில் விதிமுறை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
சூப்பர் 8 சுற்றில் எட்டு அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம் பெற்று உள்ளன. முதல் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. நான்காவதாக வங்கதேசம் அல்லது நெதர்லாந்து ஆகிய இரு அணிகளுள் எந்த அணி இடம்பெறப் போகிறது என்பது நாளை தெரிந்து விடும்.
இரண்டாவது பிரிவில் தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் அமெரிக்கா தவிர்த்து மற்ற மூன்று அணிகளுமே வலுவான டி20 அணிகள். சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் இரண்டாவது பிரிவில் இடம் பெற்றிருக்கும் மூன்று வலுவான அணிகளில் ஒரு அணி நிச்சயம் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழக்கும். ஆனால், முதல் பிரிவில், ஆப்கானிஸ்தான் மற்றும் மற்றொரு சிறிய அணியை ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியாவுக்கு சாதகமாக செயல்பட்டு அவர்களுக்கு எளிதான அணிகள் இருக்கும் வகையிலும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகளை ஒரே பிரிவில் ஆடவைத்து பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக அந்த அணிகளின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த மூன்று அணிகளும் தங்கள் பிரிவில் அமெரிக்காவை வீழ்த்தினாலும் கூட தங்களுக்குள் நடக்கும் போட்டிகளில் தோல்வி அடைந்து தான் ஆக வேண்டும். அப்போது ஒரு பெரிய அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும்.