நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் அணிகளில் பலமான அணி இந்தியா தான் எனவும், இந்த முறை உலகக் கோப்பை வெல்லப்போவது இந்தியா தான் எனவும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் கூறி இருக்கிறார்.
இத்தனைக்கும் கடந்த 2022 உலகக்கோப்பை வென்றது இங்கிலாந்து அணி தான். தனது சொந்த அணியை கூட விட்டு விட்டு, இந்தியா தான் உலகக் கோப்பை வெல்லும் என இயான் மார்கன் உறுதியாக கூறி இருக்கிறார். இது இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இது குறித்து இயான் மார்கன் பேசுகையில் இந்திய அணி பலமான அணியாக இருப்பதாகவும், இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களை தவிர யாரெல்லாம் அணியில் வாய்ப்பை இழந்தார்கள் என நாம் பேசிக் கொண்டிருக்கிறோம், அந்த அளவுக்கு அந்த அணியின் தரம் உள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும், ஒரு தாளில் எழுதி கணக்கிட்டு பார்க்கும் போது இந்தியா பலமான அணியாக உள்ளது, அந்த பலத்தை ஆடுகளத்தில் வெளிப்படுத்தினால் இந்தியா தான் உலகக் கோப்பை வெல்லும் எனவும் குறிப்பிட்டார்.
இது குறித்து இயான் மார்கன் பேசியது - "2024 டி20 உலகக் கோப்பையில் காயங்கள் ஏற்பட்டாலும் கூட பலமான அணியாக இருக்கப் போவது இந்தியா தான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்களின் பலம் மற்றும் ஆழம் மிகவும் அற்புதமாக உள்ளது. தற்சமயம் நாம் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களைத் தவிர யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை என பேசிக்கொண்டு இருக்கிறோம். ஏனெனில், அந்த அளவுக்கு அந்த அணியின் தரம் உள்ளது."
"என்னை கேட்டால் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணி இந்தியா தான். அதற்கு காரணம் தாளில் அந்த அணி மிகவும் தரமான அணியாக உள்ளது. அதை களத்தில் வெளிப்படுத்தினால் அவர்களால் இந்த தொடரில் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும்" இவ்வாறு இயான் மார்கன் இந்திய அணி குறித்து பேசி இருக்கிறார்.