நியூயார்க் : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது முதல் முறையாக அமெரிக்காவில் நடைபெறுகிறது. அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் விதமாக ஐசிசி இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்துடன் மோதியது.
இதற்காக நியூயார்க் புறநகரில் ஒரு காலி மைதானத்தில் தற்காலிக ஸ்டேடியம் அமைக்கப்பட்டு அதில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. ஏற்கனவே ஆடுகளம் மிகவும் மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் நேற்றைய ஆட்டத்தில் கூட அயர்லாந்து அணி 96 ரன்கள் தான் எடுத்தது.

இதனை அடுத்து இந்திய அணி 12.2 ஓவர்கள் எல்லாம் இரண்டு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியை ஏராளமான இந்தியர்கள் வந்து பார்த்தார்கள். இந்திய ரசிகர்களை நம்பி தான் தற்போது இந்த தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஜெகன் விநாயகம் என்ற நபர் சமூக வலைத்தளத்தில் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
அதில் சென்னையை சேர்ந்த ஜெகன் கடந்த 20 ஆண்டுகளாக நியூயார்க் நகரில் வசித்து வருகிறார் இந்த நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உடன் நேரடியாக அவர் சென்றிருக்கிறார். ஐசிசி போட்டிக்கான டிக்கெட்டை ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரீமியம் என இரண்டு வகையில் பிரித்து இருக்கிறது.
இதில் பிரிமியம் என்பது போட்டியை அருகில் இருந்து அனைத்து கோணங்களும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் இருக்கைகளுக்கானது. இதற்கு ஒரு டிக்கெட் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 30 ஆயிரம் ரூபாய் ஆகும். எனினும் இந்த டிக்கெட்டை வாங்கி மைதானத்திற்கு ஜெகன் நேரில் சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரை விட குறைவான மதிப்பில் டிக்கெட் வாங்கிய நபர்கள் அந்த இடத்தில் அமர்ந்திருக்கிறார்கள்.
இதனால் மைதானத்தில் மேலே கடைசி வரிசையில் அமர்ந்து போட்டியை பார்க்கும் நிலை ஜெகனுக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஐசிசி தங்களை அதிக காசை பெற்று விட்டு ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பார்வையாளர்களுக்காக போதிய வசதியும் செய்து தரப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இனிவரும் போட்டிகளுக்காவது எந்தத் தொகைக்கு எந்த டிக்கெட் என்ற ரீதியில் சரியான இடத்தில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மேற்கூரை இல்லாதது பெரும் ஏமாற்றத்தை கொடுத்ததாகும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.