நியூயார்க் : 2024 டி20 உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற வருகிறது. வெஸ்ட் இண்டீஸ்-இல் எப்போதுமே பிட்ச் சற்று மந்தமாகவே இருக்கும். இது அனைவரும் அறிந்ததே. எனினும், அமெரிக்காவில் உள்ள பிட்ச்கள் அதிரடி ஆட்டத்திற்கு ஏற்றதாக இருக்கும் என கருதப்பட்டது.
அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 194 ரன் குவிக்கப்பட்டது. அதை அமெரிக்கா சேஸிங் செய்து வெற்றியும் பெற்றது. அதனால் அங்கு டி20 போட்டிகளுக்கு ஏற்ற பிட்ச் இருப்பதாக கருதப்பட்டது.

இந்த நிலையில், நியூயார்க் நகரில் நடந்த தென்னாப்பிரிக்கா -இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியிலும் அதிக ரன் குவிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். இங்குதான் இந்தியா - பாகிஸ்தான் போட்டியும் நடக்க உள்ளது. ஆனால், இலங்கை அணி தட்டுத் தடுமாறி 19.1 ஓவர்களில் 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. அது அந்த அணியின் மோசமான செயல்பாடு என்றே பலரும் எண்ணினர். ஆனால், அடுத்து அதிரடி பேட்ஸ்மேன்களை கொண்ட தென்னாப்பிரிக்கா அணி சேஸிங் செய்ததை பார்த்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.
தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் போட்டி போல மிகவும் நிதானமாக ரன் சேர்த்தனர். அதற்கு காரணம், அந்த பிட்ச் மிகவும் மந்தமாக இருந்ததுதான். அது மட்டும் இன்றி அவுட் ஃபீல்டும் மெதுவாக இருந்ததாக சொல்லப்பட்டது. அதாவது ஒரு பந்தை பவுண்டரிக்கு அடித்தால், அது அவுட் ஃபீல்டில் பிட்ச் ஆன பின் வேகமாக உருண்டு ஓட வேண்டும். ஆனால் நியூயார்க் மைதானத்தில் பந்து மெதுவாகவே சென்றது. அதனால், பவுண்டரி அடிக்கவும் சிரமமாக இருந்தது.
அதே சமயம் பிட்ச் மந்தமாக இருந்ததால் சிக்ஸ் அடிப்பதும் ஆபத்தானதாக இருந்தது. அதனால், தென்னாப்பிரிக்கா அணியும் போராடி ரன் சேர்த்து. அந்த அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 78 ரன்களை சேஸிங் செய்து முடித்தது.
இதை அடுத்து அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வேண்டி அந்த நாட்டில் டி20 உலக கோப்பை நடத்தப்படும் நிலையில், இது போன்ற மோசமான பிட்ச்சை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தயாரித்து இருப்பது அதற்கு நேர்மாறானது என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
டி20 கிரிக்கெட்டுக்கு லாயக்கே இல்லாத மைதானத்தில் போட்டிகளை நடத்துவதற்கு பதிலாக இந்த உலகக் கோப்பையை ரத்து செய்து விடலாம் என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கூறி வருகின்றனர். 2007 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ்-இல் நடந்த போது, அதுவே மிக மோசமான உலகக் கோப்பை என கூறப்பட்டது. அதேபோல இந்த உலகக் கோப்பையும் மிகவும் மோசமான உலகக் கோப்பைகளின் வரலாற்றில் இடம்பெறும் என சொல்லி வருகின்றனர்.