மும்பை : இந்திய டி20 அணியில் தவிர்க்க முடியாத வீரர் என சொல்லப்பட்டு வந்த அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங் 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. 15 வீரர்கள் கொண்ட அணியில் ரிங்கு சிங்கிற்கு இடம் மறுக்கப்பட்ட நிலையில் அவர் உடைந்து போயிருப்பதாக அவரது தந்தை கூறினார்.
ரிங்கு சிங் உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவார் என நினைத்து தாங்கள் இனிப்புகளையும், பட்டாசுகளையும் வாங்கி வைத்து காத்திருந்தோம். ஆனால், அவர் தனக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என கூறினார் என்றார் அவரது தந்தை.

ரிங்கு சிங் பேட்டிங் செய்து வந்த மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே போன்ற வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக அனுபவம் வாய்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் இடம் பெறச் செய்ய வேண்டி ரிங்கு சிங்கிற்கு இடம் மறுக்கப்பட்டது. மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக சிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டார்.
ரிங்கு சிங் 15 வீரர்கள் கொண்ட அணியில் இடம் பெறாத நிலையில், இந்திய அணியுடன் பயணம் செய்யும் நான்கு வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். அதாவது முதல் 15 வீரர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டு உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினால் இந்த நான்கு வீரர்களில் இருந்து ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும். எனவே, உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் ரிங்கு சிங்கின் கனவு உடைந்து போனது.
ரிங்கு சிங் இந்திய அணியில் இடம் பெறாதது குறித்து ரசிகர்கள் கொந்தளித்து வந்த நிலையில், அவரது தந்தையிடம் வட இந்திய ஊடகம் ஒன்று பேட்டி கண்டது. அப்போது பேசிய அவர், "நாங்கள் நிறைய நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், இப்போது ஏமாற்றமாக இருக்கிறது. நாங்கள் அவர் உலகக்கோப்பை அணியில் இடம் பெறப் போகும் செய்தியை கொண்டாட இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வாங்கி வைத்து காத்திருந்தோம். ரிங்கு சிங் முதல் 11 வீரர்களில் ஒருவராக விளையாடுவார் என நாங்கள் நினைத்தோம்." என்றார்.
அடுத்து ரிங்கு சிங் என்ன மனநிலையில் இருக்கிறார் என நிருபர் கேட்ட போது, "அவர் மனம் உடைந்து போயிருக்கிறார். அவர் தன் தாயுடன் தொலைபேசியில் பேசினார். தன்னை முதல் 11 வீரர்கள் மற்றும் 15 வீரர்கள் அணிகளில் தேர்வு செய்யவில்லை என்று கூறினார். ஆனாலும், தான் இந்திய அணியுடன் பயணம் செய்ய இருப்பதாகக் கூறினார்." என்றார் அவரது தந்தை.