மும்பை: டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர்களது இடத்தில் எந்த வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இவர்களது இடத்தில் விளையாட 5 வீரர்கள் தயாராக இருப்பதால், தீவிர விவாதம் நடந்து வருகிறது.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரை 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி வென்று சாம்பியனாகியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணியின் நீண்ட நாள் ஏக்கம் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் கண்ணீர்விட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வையும் அறிவித்துள்ளனர். இதனால் அடுத்த தலைமுறை வீரர்கள் டி20 கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு செல்ல வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கவுள்ளது.
இதனால் டி20 அணியை தயார் செய்வதற்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது தேவைப்படும். அந்த வகையில் சரியான நேரத்தில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இளம் தலைமுறைக்கு வழி கொடுத்துள்ளனர். இதனால் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் இடத்தில் எந்த வீரர் விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இருவரும் நிலையான இடத்தை பிடித்துவிட்டனர். மறுமுனையில் சஞ்சு சாம்சனும் மிடில் ஆர்டரில் இடத்தை பிடித்துவிட்டதாகவே பார்க்கப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக அசத்தியுள்ளதோடு, ஏற்கனவே இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட அனுபவத்துடன் இருக்கிறார். இன்னொரு பக்கம் ஐதராபாத் அணிக்காக ஆடிய அபிஷேக் சர்மா ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன் மூலமாக 2 வீரர்களுக்கான இடத்திற்கு 5 வீரர்கள் போட்டியில் உள்ளனர். இதில் ஜெய்ஸ்வால் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால், நிச்சயம் ஒருவர் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய மூவரில் யாருக்கு புதிய பயிற்சியாளராக வரப்போகும் கவுதம் கம்பீரின் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.