பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றியை பெற்று, 17 ஆண்டுகளுக்கு பின் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையொட்டி இந்திய முன்னாள் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராமில் இந்திய அணிக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்பின் 7 டி20 உலகக்கோப்பையில் விளையாடிய இந்திய அணி ஒருமுறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. அதுமட்டுமல்லாமல் 2013ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதே, இந்திய அணியின் கடைசி ஐசிசி தொடர் வெற்றியாகும்.

இதன்பின் ஐசிசி தொடரில் 4 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய போதும், இந்திய அணியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பையை 17 ஆண்டுகளுக்கு பின் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெற்றிக்கு பின் இந்திய அணியின் விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட அத்தனை வீரர்களும் கண்ணீர் சிந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வெற்றிக்கு பின் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி உள்ளிட்ட அனைவரும் இந்திய அணிக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்து கூறினர். இதனிடையே ரசிகர்கள் பலரும் தோனி வாழ்த்து கூறுவாரா என்ற எதிர்பார்த்திருந்தனர்.
ஏனென்றால் சோசியல் மீடியா பயன்பாட்டில் தோனி அதிகளவு ஆர்வம் காட்டியதில்லை. இந்த நிலையில் தோனியும் இந்திய அணிக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், உலகக்கோப்பை சாம்பியன்ஸ் 2024.. என் இதயத்துடிப்பு எகிறிவிட்டது.. ஆனால் இந்திய வீரர்கள் நிதானமாக, தங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து எப்போதும் போல் வெற்றியை பெற்றுவிட்டீர்கள்.
உலகக்கோப்பை மீண்டும் வென்று கொண்டு வந்ததற்காக உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதற்காக வாழ்த்துகள்.. அதேபோல் விலைமதிப்பில்லாத பிறந்தநாள் பரிசுக்காக நன்றியை கூறிக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் இந்திய அணி உலகக்கோப்பை வென்ற புகைப்படத்தையும் இணைத்துள்ளார். தோனியின் இந்த பதிவு ட்ரெண்டாகி வருகிறது.
