பார்படாஸ்: 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக பங்களித்து வரும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாழ்வில் மிஸ்ஸாகி இருந்த ஐசிசி கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணி வீரர்கள் அனைவரும் அவருக்காக வெற்றிபெற வேண்டும் என்று நினைத்ததாக கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்புக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், இந்த வெற்றி எனக்கு அதிகமாக தேவைப்பட்டது என்றே கூற வேண்டும். இவ்வளவு ஆண்டுகளாக அடித்த ரன்கள் எதுவும் பெரிதல்ல. அவற்றை விடவும் இந்த வெற்றியும், கோப்பையும் முக்கியம். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆகச்சிறந்த வெற்றியா என்பது தெரியாது. ஆனால் ஆகச்சிறந்த வெற்றிகளில் இதுவும் ஒன்று.
இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐசிசி கோப்பையை வெல்வதற்கு எங்கள் அனைவரைவிடவும் தகுதியானவர். கடந்த 25 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டுக்கு அவரின் ஆற்றிய பங்களிப்பு அளவிட முடியாதது. ராகுல் டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்வில் இது ஒன்று தான் மிஸ்ஸாகி இருந்தது. இது எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.
ஏனென்றால் இந்திய அணியில் உள்ள அனைவரும் அவருக்காக வெல்ல வேண்டும் என்று நினைத்தோம். இந்த வெற்றிக்கு பின் அவரின் கண்களில் இருந்த பெருமிதத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இந்திய கிரிக்கெட்டுக்காக ஏராளமான தியாகங்களை செய்தவர். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக உழைத்திருக்கிறார். பல சூழல்களில் அவரின் எண்ணங்களை கட்டுப்படுத்தி கொள்வார். ஏனென்றால் அவரின் வேகத்திற்கு எங்களால் பயணிப்பது எளிதல்ல. அதனால் அவர் வேகத்தை குறைத்து கொள்வார்.
ஒவ்வொரு வீரரையும் புரிந்து கொண்டு, அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்தார். ஒவ்வொரு வீரருக்கும் அவர்களின் ரோலை புரிய வைப்பார். அவர்களுடன் தொடர்ந்து உரையாடி கொண்டே இருப்பார். அழுத்தம் நிறைந்த போட்டிகளில் முதல் பேட்டிங் செய்து ரன்கள் இருந்தால், எனக்கு வசதியாக இருக்கும். அதற்கேற்ப பவுலிங்கில் முடிவுகளை எடுப்பேன். என்னுடைய ஸ்டைல் அதுதான் என்று தெரிவித்துள்ளார்.