பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ராவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த பும்ரா 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியை பல்வேறு தருணங்களிலும் காப்பாற்றிய பும்ராவுக்கு தொடர் நாயகன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பும்ரா பேசுகையில், வழக்கமாக எமோஷனை ஓரமாக வைத்துவிட்டு, அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று பணியை தொடங்கிவிடுவேன். ஆனால் இன்று எனக்கு பேசவே வார்த்தைகள் வரவில்லை.
எந்தவொரு போட்டிக்கு பின்னரும் இதுவரை கண்ணீர் சிந்தியது கிடையாது. ஆனால் இப்போது எமோஷனலாக உள்ளது. நாங்கள் போட்டியில் தோல்வியடையும் நிலையில் இருந்து, எப்படியோ வென்றுள்ளோம். எனது குடும்பம் இங்குதான் உள்ளது. கடந்த முறை அரையிறுதி வரை வந்து தோல்வியடைந்தோம். இம்முறை இறுதிப்போட்டியில் வென்றுள்ளோம். இதனைவிட சிறந்த உணர்வு எதுவும் கிடையாது.
என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டு பெரிதாக எதையும் சிந்திக்கவில்லை. அழுத்தம் நிறைந்த போட்டிகள் வரும் போது, எப்படியாவது சிறப்பாக செயல்பட்டு வெல்ல வேண்டும். இந்த தொடர் முழுக்கவே அப்படிதான் நினைத்து செயல்பட்டேன். எப்போதும் ஒரு பந்து வீசுகிறோம் என்றால், அந்த பந்தில் மட்டுமே கவனம் கொள்வேன்.
அதனை கடந்து அடுத்த ஓவர் பற்றியோ, பேட்ஸ்மேன் குறித்தோ சிந்தனைக்கு செல்ல மாட்டேன். சில நேரங்களில் உணர்வுகளும், அழுத்தமும் நம்மை ஆட்கொள்ளும். அதனை ஆட்டம் முடிவடைந்த பின் கத்தி, சத்தம் போட்டு வெளிப்படுத்தி கொள்ளலாம். 16வது ஓவரை வீச வந்த போது பந்து கொஞ்சம் ரிவர்ஸ் ஆனது. அதனால் எந்த ஷாட்டை விளையாட பேட்ஸ்மேன்கள் கஷ்டப்படுவார்கள் என்று சிந்தித்தேன். அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட்டேன் என்று தெரிவித்துள்ளார்.