பார்படாஸ்: இந்திய அணியின் கேப்டனாகவோ, பேட்ஸ்மேனாகவோ ரோகித் சர்மாவை மிஸ் செய்வதை காட்டிலும், சக மனிதராக மிஸ் செய்வேன் என்று முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். என்னிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்ட ரோகித் சர்மா, இந்திய அணியை வழிநடத்திய விதம் மூலம் கவர்ந்துவிட்டதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கேப்டன் - பயிற்சியாளர் இடையிலான புரிதல் ஒவ்வொரு வெற்றிக்கும் மிகவும் அவசியமானது. அந்த வகையில் ஜான் ரைட் - கங்குலி, தோனி - கேரி கிரிஸ்டன், விராட் கோலி - ரவி சாஸ்திரி ஆகிய கூட்டணிக்கு பின் ரோகித் சர்மா - ராகுல் டிராவிட் கூட்டணி சிறந்த வெற்றிகளை பெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பையை வென்றதோடு, இவர்களின் கூட்டணி முடிவு வந்துள்ளது.

2021ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக வந்த ராகுல் டிராவிட், ஐசிசி கோப்பையை வென்று பணியை நிறைவு செய்துள்ளார். அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளார். இருப்பினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக புதிய பயிற்சியாளருடன் பயணிக்கவுள்ளார்.
இந்த நிலையில் ரோகித் சர்மா உடனான உறவு குறித்து ராகுல் டிராவிட் பேசுகையில், ஒரு மனிதராக ரோகித் சர்மாவை அதிகமாக மிஸ் செய்வேன் என்று நினைக்கிறேன். ரோகித் சர்மாவின் கிரிக்கெட், கேப்டன்சி என்று எதை மறந்தாலும், ஒரு மனிதராக என்னை மிகவும் கவர்ந்துவிட்டார். என்னிடம் மிகுந்த மரியாதை காட்டிய ரோகித் சர்மா, அர்ப்பணிப்புடன் எந்த சூழலிலும் பின் வாங்காத குணத்தால் இந்திய அணியை வழிநடத்தினார்.
அதனால் ரோகித் சர்மாவை அதிகமாக மிஸ் செய்வேன். அவர் மிகச்சிறந்த கேப்டன், மிகச்சிறந்த பேட்ஸ்மேன், நிச்சயம் இன்னும் அதிக கோப்பைகளை வெல்வார். சக மனிதராக அவருடன் நேரம் செலிட விரும்புவேன் என்று தெரிவித்துள்ளார். கேப்டனான பின் ரோகித் சர்மா வழிநடத்திய பெரும்பாலான போட்டிகளுக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட்டார்.
குறிப்பாக ஆசியக் கோப்பை, உலகக்கோப்பை மற்றும் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் ஆகியவற்றின் போது ராகுல் டிராவிட் - ரோகித் சர்மா கூட்டணி இணைந்து அசத்தல் வெற்றிகளை பெற்றது. அதன் உச்சமாக ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வெற்றி அமைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக ராகுல் டிராவிட் - ரோகித் சர்மா கூட்டணி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.