பார்படாஸ்: ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வென்ற தேதி மற்றும் டி20 உலகக்கோப்பை இரண்டையும் உடம்பில் பச்சைக் குத்தி கொள்ளப் போவதாக நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். சூர்யகுமார் யாதவின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் டி20 உலகக்கோப்பையை இரண்டு முறை வென்ற 2வது அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது.

இதற்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி மட்டுமே 2 முறை டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தது. இந்த கோப்பையை வெல்வதற்கு சூர்யகுமார் யாதவ் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறுவதற்கு 16 ரன்கள் தேவையாக இருந்தது. முதல் பந்திலேயே டேவிட் மில்லர் பந்தை பறக்கவிட்டார்.
அது கிட்டத்தட்ட சிக்சருக்கு சென்றுவிட்டதாக ரசிகர்கள் பார்த்த போது, திடீரென காற்றில் பறந்து வந்ததை போல் சூர்யகுமார் யாதவ் உள்ளே புகுந்து அசாத்திய கேட்ச் ஒன்றை பிடித்து மிரட்டினார். அவரின் கால்கள் பவுண்டரி லைனில் பட்டுவிட்டதா என்று ரசிகர்கள் பீதியுடன் இருந்த போது, எல்இடி திரையில் அவுட் என்று வந்த போது தான் இந்திய ரசிகர்களுக்கு உயிரே வந்தது.
1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் கொடுத்த கேட்சை கபில் தேவ் பின்னால் ஓடி சென்று பிடித்து இந்திய அணி வெற்றிபெற காரணமாக இருந்தார். அந்த கேட்சிற்கு நிகரான கேட்சாக சூர்யகுமார் யாதவின் ஃபீல்டிங் அமைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் சூர்யகுமார் யாதவை பாராட்டி வந்தனர்.
இந்திய அணிக்காக 3 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், முதல்முறையாக ஐசிசி கோப்பையை வென்றுள்ளார். இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற நாள் மற்றும் டி20 உலகக்கோப்பை இரண்டையும் பச்சைக் குத்தி கொள்ளப் போகிறேன். இதனை ஏற்கனவே திட்டமிட்டிருந்தேன்.
2023ஆம் ஆண்டு இந்திய மண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரை வென்றால், பச்சைக் குத்தி கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததால், நடக்காமல் போனது. இம்முறை நாங்கள் உலகக்கோப்பையை வென்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.