பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் அவரை மைதானத்திலேயே தூக்கி கொண்டாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது கடைசி போட்டியில் இந்திய அணிக்காக கோப்பையை ராகுல் டிராவிட் வென்று கொடுத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. 2007ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் குரூப் சுற்றில் வெளியேறிய இந்திய அணி, அதே மண்ணில் டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.

அன்றைய உலகக்கோப்பையை இந்திய அணியின் கேப்டனாக இருந்து தோல்வியை எதிர்கொண்ட ராகுல் டிராவிட், இம்முறை பயிற்சியாளராக இருந்து டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சீனியர் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட் வெல்லும் முதல் ஐசிசி உலகக்கோப்பை இதுதான். அந்த உலகக்கோப்பையை விராட் கோலி கையில் கொடுத்த போது குழந்தையை போல் கொண்டாடினார்.
உணர்ச்சிகளை பெரிதாக வெளிக்காட்டாத ராகுல் டிராவிட் இம்முறை குழந்தையை போல் கொண்டாடியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியுடன் பயணித்து வரும் ராகுல் டிராவிட், இந்த போட்டியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டரான ராகுல் டிராவிட், பயிற்சியாளராக தனது கடைசி போட்டியில் இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பை வென்று அசத்தியுள்ளார். இதனால் இந்திய அணி வீரர்கள் பலரும் ராகுல் டிராவிட் உடனான கடைசி நிமிடத்தை இன்னும் ஸ்பெஷலாக மாற்றியுள்ளனர்.
பார்படாஸ் மைதானத்திலேயே இந்திய அணி வீரர்கள் அனைவரும் இணைந்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை தோளில் தூக்கி வைத்து கொண்டாடியுள்ளனர். கடைசியாக அவரை சிறுகுழந்தையை போல் தூக்கி கொண்டாடிய காட்சிகள் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றனர்.