பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரை 2வது முறையாக வென்று சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இந்த கோப்பையை கேப்டன் ரோகித் சர்மா பெற்றுவிட்டு விராட் கோலி கைகளில் கொடுக்க, அதனை நேராக ராகுல் டிராவிட் கைகளில் கொடுத்தார். அதனை ராகுல் டிராவிட் கையில் பிடித்து வானை பார்த்து கொண்டாடிய காட்சிகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முதல்முறையாக ஐசிசி கோப்பையை வென்று அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டுக்கு இதுதான் கடைசி போட்டியாகும். இதனால் பலரும் ராகுல் டிராவிட்டுக்காக இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று விரும்பினர். அதுமட்டுமல்லாமல் எந்த வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரில் தோல்வியடைந்த கேப்டன்சியில் இருந்து ராகுல் டிராவிட் விலகினாரோ, அதே மண்ணில் பயிற்சியாளராக இம்முறை களமிறங்கினார்.
கிட்டத்தட்ட சக்தே இந்தியா படத்தில் ஷாரூக் கான் நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணியின் பயிற்சியாளராக வருவது போல் ராகுல் டிராவிட்டும் வந்தார். அந்த படத்தில் எப்படி ஷாரூக் கான் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்று வெற்றிபெற வைப்பாரோ, அதேபோல் ராகுல் டிராவிட்டும் 11 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு ஐசிசி கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.
இந்திய அணி கோப்பையை வென்ற நிமிடத்திலேயே கண்ணீருடன் ஓடி வந்து விராட் கோலியை கட்டியணைத்து ராகுல் டிராவிட் கொண்டாடினார். அதன்பின் விருது விழா நிகழ்ச்சியில் கேப்டன் ரோகித் சர்மா ரோபோவை போல் நடந்து வந்த டி20 உலகக்கோப்பையை வாங்கி, அப்படியே வீரர்களின் கையில் கொடுத்து கொண்டாடினார். அதனை பெற்றுக் கொண்ட விராட் கோலி நேராக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கைகளில் கொடுத்தார்.
அதனை பெற்று கொண்ட ராகுல் டிராவிட், கோப்பையை தலைக்கு மேல் கொண்டு சென்று கண்ணை மூடி கொண்டு ஆக்ரோஷமாக கத்தி கொண்டாடினார். வீரராக இருக்கும் போது ராகுல் டிராவிட் உலகக்கோப்பையை வெல்லாத நிலையில், முதல்முறையாக சீனியர் கிரிக்கெட்டில் பயிற்சியாளராக உலகக்கோப்பையை வென்றுள்ளார். ராகுல் டிராவிட் டி20 உலகக்கோப்பையை பெற்று வீரர்களுடன் கொண்டாடிய காட்சிகள் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.