பார்படாஸ்: 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றில் வெளியேறிய இந்திய அணி, 17 ஆண்டுகளுக்கு பின் அதே மண்ணில் டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்ததன் மூலம் இந்திய கிரிக்கெட் ஒரு வட்டத்திற்கு வந்துள்ளதாக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்டுள்ளார். தனது நண்பன் ராகுல் டிராவிட்டுக்காக மகிழ்ச்சியடைவதாகவும் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை வென்றதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் ஐசிசி கோப்பை கனவும் நனவாகியுள்ளது. இதனை இந்திய அணி மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயணம் பலராலும் சிலாகிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் 2007ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. தற்போது அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வெற்றிபெற்று அசத்தியுள்ளார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்திய ஜெர்சியில் இணையும் ஒவ்வொரு ஸ்டாரும் இந்தியாவில் உள்ள அடுத்த தலைமுறையை தங்களின் கனவை நோக்கி பறக்க ஊக்குவிக்கும். தற்போது இந்திய அணி 4வது ஸ்டாரை வென்றுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இது 2வது ஸ்டாராகும். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இந்திய கிரிக்கெட் ஒரு வட்டத்திற்குள் முழுமையடைந்துள்ளது.

2007ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றில் இருந்து வெளியேறி இந்திய அணி வீழ்ந்தது. அங்கிருந்து ஒரு பெரும் பயணம் மேற்கொண்டு டி20 உலகக்கோப்பையை வெல்வது சாதாரண விஷயமல்ல. எனது நண்பர் ராகுல் டிராவிட்டுக்காக மகிழ்ச்சியடைகிறது. ஏனென்றால் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வெற்றியில் ராகுல் டிராவிட்டால் பங்களிக்க முடியவில்லை. ஆனால் டி20 உலகக்கோப்பை வெற்றியில் ராகுல் டிராவிட்டின் பங்களிப்பு மிகப்பெரியது.
அவருக்காக கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். ரோகித் சர்மாவை பற்றி என்ன சொல்வது.. சூப்பர் கேப்டன்சி.. 2023 ஒருநாள் உலகக்கோப்பை தோல்வியை பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்திய வீரர்கள் அனைவரையும் டி20 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஓட வைத்தது தலைவனுக்கான அடையாளமாக உள்ளது. தொடர் நாயகன் பும்ரா, ஆட்டநாயகன் விராட் கோலி இருவரும் முழுக்க முழுக்க தகுதியானவர்கள். எப்போது தேவையோ, அப்போது சிறப்பாக செயல்பட்டு அசத்திவிட்டனர்.
அதேபோல் ராகுல் டிராவிட் மட்டுமல்லாமல் விக்ரம் ரத்தோர், பராஸ் ஆம்ரே ஆகியோரும் 1996ஆம் ஆண்டு தான் இந்திய அணியில் அறிமுகமானார்கள். 1996ஆம் ஆண்டு பேட்ச் கீழ் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதை பார்ப்பதே அற்புதமான உணர்வாக உள்ளது. இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், பிசிசிஐ அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.