பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்தது. 26 ஆண்டுகளுக்கு பின் ஐசிசி இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக தகுதிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி கடைசி நேரத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடின. இந்த பொட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் தோல்வியடைந்தது.

17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் ஆனந்த கண்ணீருடன் ஒருபுறம் கொண்டாட, முதல் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துவிட்டோம் என்று தென்னாப்பிரிக்கா வீரர்கள் இன்னொரு புறம் அமர்ந்து கண்ணீர் சிந்தினர். அதிலும் சீனியர் வீரர்களான மில்லர் மற்றும் கிளாசன் இருவரும் கண்ணீருடன் இருந்த காட்சி இந்திய ரசிகர்களையும் கவலையடைய செய்தது.
இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு இந்திய வீரர் ரிஷப் பண்ட் ஆறுதல் கூறினார். அதேபோல் இந்திய ரசிகர்கள் பலரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு சோசியல் மீடியா மூலமாக ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஓராண்டில் மட்டும் தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் கிளாசன் 4 முறை இறுதிப்போட்டியில் விளையாடி 4லும் தோல்வியை சந்தித்துள்ளது தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் நடந்த எம்எல்சி லீக் தொடரில் கிளாசன் ஆடிய சியாட்டல் ஆர்காஸ் அணிக்கு இறுதிப்போட்டியில் எம்ஐ நியூயார்க்கிடம் தோல்வியை சந்தித்தது. அதேபோல் எஸ்ஏ20 லீக் தொடரில் கிளாசன் விளையாடிய டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியிடம் தோல்வியடைந்தது.
அதேபோல் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியிடம் கிளாசன் விளையாடிய ஐதராபாத் அணி தோல்வியை சந்தித்தது. தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியிடம் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் கிளாசன் 27 பந்துகளில் 5 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 52 ரன்களை விளாசி இருந்தார். இருந்தும் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியடைந்தது. இதனால் கிளாசனுக்கு கொஞ்சம் கூட அதிர்ஷ்டம் இல்லை என்று ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.