பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் போது குரூப் சுற்று போட்டிகளில் தொடக்க வீரராக சொதப்பிய போது, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரிடமும் சென்று, மீண்டும் நம்பர் 3 பேட்டிங் வரிசையில் விளையாடவா என்று கேட்டதாக விராட் கோலி தகவல் பகிர்ந்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய நட்சத்திர வீரர் விராட் கோலி 59 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 76 ரன்களை விளாசினார். இதன் காரணமாக ஆட்டநாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவரை 34 இன்னிங்ஸ்களில் விளையாடிய விராட் கோலி, 14 அரைசதங்கள் உட்பட 1,216 ரன்களை விளாசி சாதனை படைத்துள்ளார். இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் சொதப்பலாக தொடங்கிய விராட் கோலி, பைனலில் மிரட்டிவிட்டார்.
அதேபோல் இம்முறை தொடக்க வீரராக களமிறங்கி விராட் கோலி இந்திய அணிக்கு வென்று கொடுத்துள்ளது முதல்முறையாகும். இதுகுறித்து விராட் கோலி பேசுகையில், உண்மையை சொல்ல வேண்டுமென்றால், எனது கனவில் கூட இப்படியொரு தருணத்தை கண்டதில்லை. இந்த டி20 தொடரில் எனது ஃபார்ம் எப்படி இருந்தது என்பதை பார்த்தால், இது எனக்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது.
நீங்கள் பெரிய ஆளில்லை என்று தலைகுனிந்து ஈகோவை தூக்கி எறியும் போது, எல்லாமே சரியாக அமையும். ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தால், எல்லாமே எதிராக நடக்கும். இன்றைய இன்னிங்ஸின் போது எனக்குள் பாதுகாப்பில்லாத உணர்வு ஏற்பட்டது. ஆனால் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு சூழலுக்கு ஏற்ப விளையாடினேன்.
இந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது தொடக்க வீரராக களமிறங்கி என்னால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்திய அணிக்கு பங்களிக்க முடியாத போது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரிடமும் நேரடியாக சென்று நான் நம்பர் 3 வரிசையில் களமிறங்கவா என்று கேட்டேன். ஆனால் அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்தனர்.
இன்றைய ஆட்டத்தின் போது நாங்கள் தோலியடைந்துவிட்டோம் என்று நினைத்தேன். ஆனால் பவுலர்கள் மொத்தமாக ஆட்டத்தை மாற்றி அற்புதத்தை நிகழ்த்திவிட்டார்கள். இதுதான் என்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை தொடர். இதனை விடவும் சிறந்த முடிவு எனக்கு கிடைக்காது என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.