பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 35 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் காரணமாகவே இந்திய அணியின் ஸ்கோர் குறைந்துவிட்டதாக ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இறுதியாக இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்துள்ளது. இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 180 ரன்களுக்கு மேல் தேவை என்று பார்க்கப்பட்ட நிலையில், கொஞ்சம் குறைவாக ரன்களை சேர்த்திருப்பது ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி தரப்பில் நட்சத்திர வீரர் விராட் கோலி 59 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 76 ரன்களை சேர்த்துள்ளார்.
அதேபோல் சிறப்பாக ஆடிய அக்சர் படேல் 31 பந்துகளில் 4 சிக்ஸ், 1 ஒரு பவுண்டரி உட்பட 47 ரன்களையும், சிவம் துபே 16 பந்துகளில் 27 ரன்களையும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் நார்கியே மற்றும் மஹாராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி ரன்களை சேர்க்க தொடங்கிய விராட் கோலி, 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்திருந்தார். அதன்பின் பவுண்டரி, சிக்ஸ் எதுவும் அடிக்காமல் வெறும் 1 அல்லது 2 ரன்களை மட்டுமே எடுத்தார். 10 ஓவருக்கு பிறகாவது பவுண்டரிகளை அடிக்க தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 17 ஓவர்கள் வரை விராட் கோலி அமைதி காத்தார்.
கிட்டத்தட்ட 35 பந்துகளாக ஒரு பவுண்டரி கூட விராட் கோலி அடிக்கவில்லை. 48 பந்துகளில் 50 ரன்களை எட்டிய பின்னர், விராட் கோலி சிக்சரை விளாசினார். அந்த நேரத்தில் அக்சர் படேல், சிவம் துபே மட்டுமே சில பவுண்டரிகளையும், சிக்சர்களையும் விளாசியுள்ளனர். இதனால் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 128.8ஆக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.