மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய நிலையில், சீனியர் வீரரான ரவீந்திர ஜடேஜா ஓய்வை அறிவித்துள்ளார். இனி வரும் காலங்களில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவரது இடத்தில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த சாம்பியன் பட்டம் வென்ற அடுத்த சில நிமிடங்களிலேயே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தனர். அதன்பின் சீனியர் வீரரான ஜடேஜாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

2013ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மூவரும் இணைந்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தனர். தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் வென்றபின் உடனடியாக ஓய்வை அறிவித்து, இளைஞர்களுக்கு வழிவிட்டுள்ளனர். இதனால் அடுத்த டி20 உலகக்கோப்பை தொடருக்குள் இந்திய அணி ஜடேஜாவுக்கான மாற்று வீரரை கண்டறிய வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை பேட்ஸ்மேன்களை விடவும் ஆல்ரவுண்டர்களின் இடத்தை நிரப்புவது எளிதல்ல. கபில் தேவ் விட்டுச்சென்ற இடத்தில் இந்திய அணி நிரப்ப 30 ஆண்டுகளுக்கும் மேலாகியது. இதனால் ஜடேஜா அளவிற்கு பவுலிங் மற்றும் பேட்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரரை இந்திய அணி நிர்வாகம் தேடி கண்டறிய வேண்டும்.
அதற்கான முதற்கட்ட முயற்சிகளில் பிசிசிஐ ஏற்கனவே களமிறங்கிவிட்டது. ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அறிமுகமாகி இருந்தாலும், பெரும்பாலான போட்டிகளில் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க முடியாமல் பெஞ்சில் இருக்கிறார்.
தற்போது ஜடேஜா ஓய்வை அறிவித்திருப்பது வாஷிங்டன் சுந்தருக்கு புதிய கதவுகளை திறந்துள்ளது. இதனால் ஜிம்பாப்வே டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு பவுலிங் மற்றும் பேட்டிங்கில் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில் ஜடேஜா இடத்தில் வாஷிங்டன் சுந்தரை வைத்து நிரப்ப இந்திய அணி நிர்வாகம் கூடுதல் நம்பிக்கையுடன் முடிவெடுக்க வாய்ப்புகள் அமைந்துள்ளது. இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.