பார்படாஸ்: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர். பார்படாஸ் மைதானம் அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால், போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே ஐசிசி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் நாள் மாலை நேர பயிற்சியை இந்திய அணி ரத்து செய்துள்ளது. அதேபோல் செய்தியாளர்கள் சந்திப்பையும் அரையிறுதி போட்டி முடிவடைந்த பின் நடத்திவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் குழம்பியுள்ளனர்.

முக்கியமான இறுதிப்போட்டிக்கு முன் இந்திய அணி பயிற்சிய் ரத்து செய்ததற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். கயானாவில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் திட்டமிட்ட நேரத்தில் முடிவடையவில்லை. 2 மணி நேரம் தாமதமாக முடிவடைந்ததால், கயானாவில் இருந்து விமானம் மூலம் பார்படாஸ் வருவதற்கு நள்ளிரவாகியது.
இதன்பின் இறுதிப்போட்டிக்கு ஒருநாள் மட்டும் இடைவெளி இருப்பதால், இந்திய அணி வீரர்கள் பயிற்சியை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் ஹோட்டலில் இருந்தவாறு இறுதிப்போட்டிக்கான யுக்திகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
பார்டர் கவாஸ்கர் டிராபியின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. அதன்பின் 2வது டெஸ்ட் போட்டி நடப்பதற்கு முதல் நாள் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவில்லை. முதல் போட்டி நினைவுகள் வரக் கூடாது என்பதற்காக பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இருவரும் இணைந்து அதே முடிவை எடுத்தனர்.
அதேபோல் இந்த முறையும் பயிற்சி ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த இரு ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டியிலும் இந்திய அணி விளையாடிய போதும், மோசமான அனுபவமே கிடைத்தது. இதனால் மீண்டும் அதுபோன்ற நினைவுகளை கொண்டு வராமல் இருகக் இந்திய அணி பயிற்சியை ரத்து செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.