பார்படாஸ்: ஐபிஎல் தொடரின் போது ரசிகர்களால் அதிகம் கலாய்க்கப்பட்ட அர்ஷ்தீப் சிங், டி20 உலகக்கோப்பை தொடரில் மிரட்டல் சம்பவத்தை செய்திருக்கிறார். இதனால் 8 இன்னிங்ஸ்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அர்ஷ்தீப் சிங், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்வதற்கு இந்திய அணியின் அனைத்து வீரர்களும் முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். பேட்டிங்கில் ரோகித் சர்மா, விராட் கோலி, சிவம் துபே, சூர்யகுமார் யாதவ், ஆல்ரவுண்டராக ஹர்திக் மற்றும் அக்சர் படேல் ஜொலித்தது, பவுலிங்கில் பும்ரா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டனர்.

ஆனால் இவர்களுக்கு செல்லும் பாராட்டுகளில் அர்ஷ்தீப் சிங் பங்களிப்பு ரசிகர்களால் மறக்கப்பட்டுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மட்டும் 8 இன்னிங்ஸ்களில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியல் ஆஃப்கானிஸ்தான் பவுலர் ஃபரூக்கி மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் முதலிடத்தில் உள்ளனர்.
இந்த முறை ஒவ்வொரு போட்டியிலும் இடதுகை பவுலராக பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியது பும்ராவுக்கும் உதவியாக இருந்தே சொல்ல முடியும். அர்ஷ்தீப் சிங் வீழ்த்திய 17 விக்கெட்டுகளில் 9 விக்கெட்டுகள் டெத் ஓவர்களில் வீழ்த்தப்பட்டவை. அதுமட்டுமல்லாமல் 8 இன்னிங்ஸ்களில் 7 முறை முழுமையாக 4 ஓவர்களை வீசி இருக்கிறார். பும்ரா கூட அனைத்து இன்னிங்ஸ்களிலும் முழுமையாக ஓவர்களை வீசி முடிக்கவில்லை. ஐபிஎல் தொடரின் போது அர்ஷ்தீப் சிங் எகனாமி ரேட் 12.20ஆக இருந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் 7.75ஆக குறைத்துள்ளார்.
அதேபோல் டாட் பால் சதவிகிதம் 37.20 ஆக இருந்த நிலையில், டி20 உலகக்கோப்பையில் 47.91ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர பவுலரான சிராஜ் பெஞ்ச் செய்யப்பட்டு ஒவ்வொரு போட்டியிலும் அர்ஷ்தீப் சிங் களமிறக்கப்பட்டார். அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் ஒவ்வொரு ஓவரிலும் தனது முழு திறமையையும் அர்ஷ்தீப் சிங் வெளிப்படுத்தி இருக்கிறார். இருந்தாலும் பும்ராவின் அபார சாகசம் காரணமாக, அர்ஷ்தீப் சிங்கின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.
2011 உலகக்கோப்பையில் முனாஃப் படேல் செய்த பணியை, டி20 உலகக்கோப்பையில் அர்ஷ்தீப் சிங் செய்திருப்பதாக விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். 2011 உலகக்கோப்பை தொடரில் ஜாகீர் கான் 9 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் முனாஃப் படேல் 8 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார். மீடியம் ஃபாஸ்ட் பவுலரான முனாஃப் படேல், மிடில் ஓவர்களில் பார்ட்னர்ஷிப் ப்ரேக்கராக இருந்தார். அதேபோல் இம்முறை அர்ஷ்தீப் சிங்கிற்கு இரு வகையான ரோல் அளிக்கப்பட்டது. முதல் ரோல் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவது, 2வது ரோல் டெத் ஓவர்களில் ரன்கள் கட்டுப்படுத்துவது. இதில் டெத் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தியதோடு, விக்கெட்டுகளை வீழ்த்துவதும் வல்லவராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.