மியாமி: டி20 உலகக் கோப்பையில் மோசமாக தோல்வி அடைந்ததை அடுத்து பாகிஸ்தான் அணியின் ஐந்து வீரர்கள் தலைமறைவாகி உள்ளனர். பாகிஸ்தானுக்கு சென்றால் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதோடு, பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் விசாரணையை எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதால் பாபர் அசாம் உள்ளிட்ட இந்த ஐந்து வீரர்களும் பாகிஸ்தான் செல்லாமல் தலைமறைவாகி உள்ளனர்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் இடம் பெற்றிருந்தன. இதே குரூப்பில் அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளும் இருந்தன. பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் வெற்றி பெறாவிட்டாலும் மற்ற மூன்று சிறிய அணிகளையும் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், பாகிஸ்தான் அணி அமெரிக்க அணியிடமும், இந்திய அணியிடமும் தோல்வியடைந்தது. அதனால், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதை அடுத்து பாகிஸ்தான அணியில் சரியாக செயல்படாத கேப்டன் பாபர் அசாம், இமான் வாசிம், அசாம் கான், சதாப் கான் மற்றும் ஹாரிஸ் ரௌப் ஆகியோர் மீது கடுமையான விமர்சனம் எழுந்தது.
அவர்களை ஒட்டுமொத்தமாக அணியை விட்டு நீக்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டனர். இந்த நிலையில் உலகக் கோப்பையில் தங்களின் கடைசி போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிராக போராடி வென்றது பாகிஸ்தான். எளிதாக வெல்ல வேண்டிய போட்டியிலும் கூட கடினமான முறையில் வென்றது.
இந்த போட்டி முடிந்த உடன் மற்ற பாகிஸ்தான் வீரர்கள் உடனடியாக தங்கள் நாட்டு செல்ல தயாராகி விட்டனர். ஆனால், இந்த ஐந்து வீரர்களும் பாகிஸ்தானுக்கு செல்லப் போவதில்லை எனக்கு தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் லண்டனுக்கு சுற்றுலா செல்ல உள்ளதாக ஒரு தகவல் கூறப்படுகிறது. வேறு சில பாகிஸ்தான் ஊடகங்களில் இவர்கள் அமெரிக்காவிலேயே தங்கப் போகிறார்கள் என செய்தி வெளியாகி உள்ளது. ஆக மொத்தத்தில் இவர்கள் ஐந்து பேரும் சில நாட்களுக்கு தலை மறைவாகப் போவது உறுதியாகி இருக்கிறது.
உலகக்கோப்பை தோல்விக்கு பின் பாகிஸ்தானுக்கு திரும்பினால் கடுமையான எதிர்வினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். மேலும், இவர்களை அணியை விட்டு நீக்கவும் வாய்ப்புள்ளது. எனவே தற்காலிகமாக தங்கள் மீதான எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இவர்கள் ஐந்து பேரும் பாகிஸ்தானுக்கு செல்லாமல் வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.