மும்பை: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வர இருப்பதாக கூறப்படும் நிலையில் அதற்கு முன்பே அவரது ஆலோசனைகளை பிசிசிஐ செயல்படுத்தத் துவங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 2024 டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் இந்திய டி20 அணியில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
குறிப்பாக இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லாவிட்டால் நிச்சயமாக அணியில் இடம் பெற்றிருக்கும் மூத்த வீரர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர். கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இதுவே கடைசி டி20 தொடர் என கூறப்படுகிறது. ஆனால், விராட் கோலிக்கு தற்போது 35 வயது தான் ஆகிறது. அவர் இன்னும் நான்கு ஆண்டுகள் வரை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட ஆர்வமாக இருக்கிறார். அதற்கு கவுதம் கம்பீர் இடம் கொடுக்க மாட்டார் என தெரிகிறது.

குறிப்பாக டி20 அணியில் இருந்து விராட் கோலியை நீக்கவும் அவர் திட்டமிட்டு இருக்கிறார். தன்னை தலைமை பயிற்சியாளராக நியமிக்கும் பட்சத்தில் மூன்று விதமான இந்திய அணிகளை தயார் செய்ய வேண்டும் என கம்பீர் கோரிக்கை வைத்திருக்கிறார். அதாவது டெஸ்ட் அணி, ஒரு நாள் அணி, டி20 அணி என மூன்று வெவ்வேறு இந்திய அணிகள் இருக்க வேண்டும் எனவும், ஒன்று, இரண்டு வீரர்களை தவிர மற்ற வீரர்கள் மூன்று அணிகளிலும் விளையாடக் கூடாது எனவும் அவர் திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.
இது விராட் கோலியை நிச்சயம் பாதிக்கும் அவரை ஒரு நாள் அணி மற்றும் டெஸ்ட் அணியில் மட்டும் தக்க வைத்துக் கொண்டு, டி20 அணியில் இருந்து நீக்க முடிவு செய்து இருக்கிறார் கம்பீர். ஏற்கனவே, டி20 போட்டிகளில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து பல்வேறு விமர்சனங்கள் உள்ளன.
மேலும், அதிரடி ஆட்டம் ஆடும் திறன் கொண்ட ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரருக்கு விராட் கோலியால் அணியில் வாய்ப்பு இல்லாமல் போகிறது. அதை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கு வழி விடும் வகையில் விராட் கோலியை நீக்க கவுதம் கம்பீர் முடிவு செய்துள்ளார். இனி இந்திய அணியில் மூன்று வித கிரிக்கெட் அணிகளிலும் ஆடும் நட்சத்திர வீரர் என யாருமே இருக்க மாட்டார்கள் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.