மும்பை : இந்திய அணிக்கு பயிற்சி அளிப்பதை தான் விரும்புவேன் என கவுதம் கம்பீர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
கடந்த ஒரு மாதமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி நியமனம் குறித்த விவாதங்கள் இந்திய ரசிகர்கள் மத்தியில் நடந்து வருகிறது. பிசிசிஐ புதிய தலைமைப் பயிற்சியாளருக்கான அறிவிப்பை இரு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. யார் வேண்டுமானாலும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றாலும், பிசிசிஐ திரை மறைவில் சில. பயிற்சியாளர்களிடம் பேசி வந்தது.

அதில் முக்கியமான ஒருவர் கவுதம் கம்பீர். ஒரு கட்டத்தில் வெளிநாட்டு பேச்சாளர்கள் வேண்டாம் என முடிவு செய்த நிலையில் இந்திய அளவில் கவுதம் கம்பீரை விட சிறந்த தலைமை பயிற்சியாளர் யாரும் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தது பிசிசிஐ, எனினும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர் இருக்கிறார். எனவே, அந்த அணியை விட்டுவிட்டு இந்தியா அணியின் தலைமை பயிற்சியாளராக வர அவர் ஒப்புக் கொள்வாரா? என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது. அது குறித்து இதுவரை கவுதம் கம்பி வாய் திறக்காமல் இருந்தார். ஆனால், தற்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்திய அணிக்கு நான் பயிற்சி செய்வதை மிகவும் விரும்புகிறேன் தேசிய அணிக்கு பயிற்சியாளராக இருப்பதை விட வேறு பெரிய கவுரவம் இருக்க முடியாது. நீங்கள் 140 கோடி இந்தியர்களுக்காக வாய்ப்பு பெறுவீர்கள்" என்றார்.
மேலும், "140 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக நான் இருப்பேன். இந்திய அணிக்காக நீங்கள் உங்களை முன்னிறுத்துவதை விட மிகப் பெரிய விஷயம் வேறு என்ன இருக்க முடியும்? இந்தியா உலகக் கோப்பை வெல்வதற்கு நான் காரணமாக இருக்க முடியாது. 140 கோடி இந்தியர்கள் தான் இந்தியா உலக கோப்பை வெல்ல காரணமாக இருப்பார்கள்" என்றார் கவுதம் கம்பீர்.
இதன் மூலம் அவர் மறைமுகமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க ஒப்புக்கொண்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் இந்திய அணி உலக கோப்பை வெல்வது நிச்சயம் என சில ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.