மும்பை: இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருந்து வருகிறார் ரிஷப் பண்ட். அவர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால், ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது செயல்பாடு இன்னும் நம்பிக்கை அளிக்கவில்லை என கவுதம் கம்பீர் முன்பு கூறியிருந்தார். தற்போது அதே கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வர இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் பயிற்சியாளராக வந்தால் ஒரு நாள் அணி மற்றும் டி20 அணியிலிருந்து ரிஷப் பண்ட் நீக்கப்படுவார் என்ற கருத்து பரவி வருகிறது. மேலும், கவுதம் கம்பீர் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த வகையில் இனி சஞ்சு சாம்சன் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி20 அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பெறுவார் என்றும், ரிஷப் பண்ட் நீக்கப்படுவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சர்வதேச டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட் இதுவரை 74 போட்டிகளில் 1158 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 22.7 மட்டுமே. அவரது ஸ்டிரைக் ரேட் 126. இது அத்தனை நல்ல டி20 செயல்பாடு அல்ல. இதன் காரணமாகவே அவரை டி20 அணியில் இருந்து கவுதம் கம்பீர் நீக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது நடந்து முடிந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ரிஷப் பண்ட் அனைத்து போட்டிகளிலும் களமிறங்கினார். ஆனால், சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வாய்ப்பளிக்கப்படாமல் இருப்பதை பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். கடந்த ஐந்து வருடங்களாக கவுதம் கம்பீர் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு அளித்து இருக்கிறார். எனவே, இனி இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கான காலம் துவங்க இருப்பதாக அவரது ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இனி டி20 போட்டிகளுக்கு என தனி அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுவதால் ரிஷப் பண்ட் டி20 அணியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.