மும்பை: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், இந்திய ரசிகர்களால் இந்திய கிரிக்கெட்டின் எதிரியாக கருதப்படும் கிரேக் சேப்பல் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். அதில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்-டுக்கு சிறப்பு வாழ்த்து ஒன்றையும் சேர்த்து கூறியிருக்கிறார்.
அவரது இந்த வாழ்த்து செய்தி இந்திய ரசிகர்களுக்கு பழைய கசப்பான நினைவுகளை மீண்டும் வரவழைத்தது. 2005 ஆம் ஆண்டு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அப்போதைய கேப்டன் கங்குலியின் வற்புறுத்தலின் பேரில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வந்த சேப்பல், சில மாதங்களில் சவுரவ் கங்குலியை கேப்டன் பதவிலிருந்து நீக்கியதோடு, அணியில் இருந்தும் நீக்கினார்.

ராகுல் டிராவிட் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவர்கள் இருவரும் இணைந்து அணியின் நிர்வாகத்தை முடிவு செய்தனர். அதனால் சச்சின் உள்ளிட்ட பிற மூத்த வீரர்கள் ஒரு குழுவாக இருந்ததாகவும். டிராவிட் மற்றும் கிரேக் சேப்பல் மற்றொரு குழுவாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்திய அணி சில குறிப்பிட்ட வெற்றிகளை பெற்ற போதும் 2006 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சொந்த மண்ணில் முதல் சுற்றிலேயே வெளியேறியது. அடுத்து வெஸ்ட் இண்டீஸ்-இல் நடைபெற்ற 2007 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையிலும் முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. இந்திய அணி அப்போது படுமோசமான நிலையில் இருந்தது.
பின்னர் கிரேக் சேப்பல் நீக்கப்பட்டு, 2007 டி20 உலக கோப்பையில் தோனி இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பையை வென்றதால் இந்திய கிரிக்கெட் மீண்டும் புத்துணர்வு அடைந்தது. அது மட்டும் நடக்காமல் போயிருந்தால் இன்று இந்திய கிரிக்கெட் அணி எந்த நிலையில் இருந்திருக்கும் என யாராலும் சொல்ல முடியாது. அப்படி இந்திய அணியை ஒரு மோசமான நிலைக்கு கொண்டு சென்று தள்ளிய கிரேக் சேப்பல் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.
அதில் ராகுல் டிராவிட்டுக்கு அவர் கூறிய வாழ்த்து இதுதான் - "டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றதற்கு வாழ்த்துக்கள். குறிப்பாக ராகுல் டிராவிட் இந்த வெற்றியில் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இதுபோன்ற ஒரு நல்ல நேரத்தில் அவர் அணியில் இருந்து தனது பணியை முடித்து வெளியேறுவது என்பது அற்புதமானது" என கூறி இருக்கிறார்.
இதில் ராகுல் டிராவிட்டை அவர் தனியாக குறிப்பிட்டு சொல்ல ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த 2024 டி20 உலகக் கோப்பை நடந்த அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தான் 2007 ஒருநாள் போட்டி நடைபெற்றது. அப்போதுதான் இந்திய அணி முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தது. அதன் முடிவில் கிரேக் சேப்பல் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார். அவரால் ஒரு பயிற்சியாளராக உலகக்கோப்பை வெற்றியுடன் விடைபெற முடியவில்லை. ஆனால், அந்த உலகக் கோப்பையில் கடுமையாக பாதிக்கப்பட்ட ராகுல் டிராவிட் தற்போது பயிற்சியாளராக அதே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் உலகக் கோப்பை வெற்றியுடன் பணியை நிறைவு செய்துள்ளார். அதைத்தான் சுட்டிக்காட்டி இருக்கிறார் கிரேக் சேப்பல்.