நியூயார்க் : T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஆடுகளங்கள் பவுலிங்கிற்கு சாதகமாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் கணித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், சாதாரண பௌலர்கள் கூட நியூயார்க் ஆடுகளத்தில் மிகப் பிரமாதமாக பந்து வீசுவதாக தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி இன்று அயர்லாந்தை நியூயார்க் மண்ணில் எதிர்கொள்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன்சிங் இந்த ஆடுகளங்களில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். இதனால் உங்கள் அணியில் உள்ள மிகப்பெரிய வீரர்கள் மட்டும்தான் தொடக்க வீரராக களம் இறங்கி அணியை வழிநடத்த முடியும்.

ஏனென்றால் அனுபவமிக்க வீரர்களால் மட்டுமே நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்க முடியும். இது போன்ற சூழ்நிலையில் ஜெய்ஸ்வாலுக்கு இது மிகவும் கடினமாக இருக்கும். நான் இந்தியாவில் இருந்தபோது டி20 உலக கோப்பை தொடரில் சுழற் பந்துவீச்சாளர்கள் தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நினைத்தேன்.
ஆனால் அமெரிக்காவுக்கு வந்து பார்த்த போது தான் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு இந்த ஆடுகளம் கை கொடுத்தாலும் வேகப் பந்துவீச்சாளர்கள் தான் இந்த ஆடு களங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எனக்கு புரிந்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆண்டிரிச் நோக்கியா எவ்வாறு அபாரமாக பந்து வீசினார் என்பதை நாம் பார்த்தோம். இங்கு சாதாரண ஒரு பவுலர் கூட பேட்ஸ்மன்களுக்கு நெருக்கடியை கொடுக்கும் வீரராக திகழ்வார்.
நான் இந்தியா வங்கதேசம் பயிற்சி ஆட்டத்தையும் பார்த்தேன். இலங்கை தென்னாபிரிக்கா ஆட்டத்தையும் பார்த்தேன். இந்த இரண்டு போட்டிகளும் ஒரே ஆடுகளத்தில் தான் நடைபெற்றது. பவுன்ஸ் வித்தியாசமாக செயல்படுகிறது. இதனால் தொடக்க வீரர்கள் கடுமையாக தடுமாறுவார்கள். மேலும் மைதானம் மண்ணால் நிரப்பப்பட்டது போல் இருக்கிறது. இதன் காரணமாக சில வீரர்கள் காலில் வலியை உணர்வதாக கூறுகிறார்கள். எனவே இப்படிப்பட்ட வீரர்கள் இந்த மைதானங்களில் விளையாடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.