மும்பை: ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். பேட்டிங், பவுலிங்கில் மட்டும் இந்திய அணி வீரர்கள் இதுவரை முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், முதல்முறையாக ஆல்ரவுண்டர் பட்டியலிலும் இந்திய வீரர் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
கடந்த 7 மாதங்களில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அளவிற்கு சோசியல் மீடியாவில் கிண்டல் செய்யப்பட்ட வீரர்கள் யாருமில்லை. உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின் மும்பை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் பலரும் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்தனர்.

அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக மும்பை அணியை வழிநடத்தி தோல்வியையே அடைந்தார். இதனால் மும்பை ரசிகர்களும் சேர்ந்துகொள்ள, ஹர்திக் பாண்டியா எவ்வித விமர்சனங்களுக்கும் பதில் அளிக்காமல் சிரித்து கொண்டே கடந்து சென்றார். இதன்பின் நேரடியாக டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.
அப்போது ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் குறித்து மும்பை அணி ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதேபோல் விவாகரத்து சர்ச்சையும் சேர்ந்து கொண்டது. ஆனால் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்கில் தனது திறமையை வெளிப்படுத்தினார். இந்திய அணி எப்போதெல்லாம் சிக்கலில் சிக்கியதோ, அப்போதெல்லாம் இந்திய அணிக்கு அரணாக நின்றார்.
இந்த டி20 உலகக்கோப்பையில் மட்டும் 144 ரன்களும், 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். அதிலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கிளாசனின் விக்கெட்டை வீழ்த்தியதோடு, கடைசி ஓவரில் 16 ரன்களையும் டிஃபெண்ட் செய்து மிரட்டினார். இதன் பின் மைதானத்திலேயே சக வீரர்களை அணைத்து கொண்டு ஹர்திக் பாண்டியா சிந்திய கண்ணீர் ரசிகர்களை நெகிழ வைத்தது.
இதன்பின் சோசியல் மீடியாவில் ஹர்திக் பாண்டியாவிடம் ரசிகர்கள் பலரும் மன்னிப்பு கேட்டு பாராட்ட தொடங்கினர். இந்த நிலையில் ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து ஹர்திக் பாண்டியா சாதனை படைத்துள்ளார். டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஹர்திக், 222 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா தான். இதற்கு முன் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் கம்பீர், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இருந்துள்ளனர். அதேபோல் பவுலிங்கில் பும்ரா, ரவி பிஷ்னாய் இருவரும் இருந்திருக்கின்றனர். ஆனால் ஆல்ரவுண்டரிகளில் முதல்முறையாக ஹர்திக் பாண்டியா முதலிடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல் டி20 பவுலர்களுக்கான தரவரிசையில் அக்சர் படேல் 7வது இடத்திற்கு முன்னேறி இருக்கிரார். அதேபோல் குல்தீப் யாதவ் 9வது இடத்திலும், பும்ரா 12வது இடத்திலும், அர்ஷ்தீப் சிங் 14வது இடத்திலும் உள்ளனர். பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் 2வது இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7வது இடத்தையும் பிடித்துள்ளனர்.