நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டனாக களமிறங்க உள்ள ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் இந்திய அணிக்கு பின்னடைவாக மாற வாய்ப்பு உள்ளது.
வேகப்பந்து வீச்சு ஆல் - ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அதிரடி பேட்ஸ்மேன் ஆகவும் செயல்படக் கூடியவர். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவரது பேட்டிங் குறித்த விமர்சனம் இருந்தது. ஆனால், அதை உலகக் கோப்பைக்கு முன் நடந்த பயிற்சிப் போட்டியில் உடைத்தார். அமெரிக்க ஆடுகளங்களில் தன்னால் ரன் குவிக்க முடியும் என நிரூபித்தார்.

வங்கதேச அணிக்கு எதிரான அந்த பயிற்சிப் போட்டியில் பேட்டிங்கில் தன்னை நிரூபித்தார். 23 பந்துகளில் 40 ரன்கள் குவித்து இருந்தார். 4 சிக்ஸ், 2 ஃபோர் அடித்து இருந்தார். அதே சமயம் வேகப் பந்துவீச்சில் அவரது செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. வங்கதேச அணிக்கு எதிரான அந்த போட்டியில் இந்திய அணியிலேயே அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளராக இருந்தார் ஹர்திக் பாண்டியா.
மற்ற பந்துவீச்சாளர்கள் எல்லாம் ஓவருக்கு 6 ரன்களை தாண்டி ரன் கொடுக்காத நிலையில் ஹர்திக் பாண்டியா மூன்று ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதாவது ஒரு ஓவருக்கு 10 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஹர்திக் பாண்டியா விக்கெட் வீழ்த்தும் பந்து வீச்சாளர் என்றாலும் கூட அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறார்.
அவரது ஒட்டுமொத்த பந்துவீச்சை எடுத்துக் கொண்டாலும் அவர் ஒரு ஓவருக்கு அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறார். இதுவரை 81 சர்வதேச டி20 போட்டிகளில் பந்து வீசி உள்ள அவர் 73 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். ஆனால், சராசரியாக ஒரு ஓவருக்கு 8.2 ரன்கள் கொடுத்து இருக்கிறார். ஒட்டுமொத்த டி20 போட்டிகளை எடுத்துக் கொண்டால் 225 இன்னிங்ஸ்களில் 163 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஆனால், ஒரு ஓவருக்கு 8.3 ரன்கள் விட்டு கொடுத்து இருக்கிறார்.
இதுதான் ஹர்திக் பாண்டியாவின் பலவீனமாக உள்ளது. எனவே, இவரை ஐந்தாவது பந்துவீச்சாளராக இந்திய அணி பயன்படுத்தக் கூடாது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. தற்போது உத்தேச அணியில் ஹர்திக் பாண்டியாவை தவிர்த்து ஏழு பந்துவீச்சாளர்கள் உள்ளனர். சிவம் துபே கூட ஆல் - ரவுண்டர் தான் அவரும் வேகப்பந்து வீசக்கூடியவர் தான். அவரது பேட்டிங் குறித்த சந்தேகம் இருந்தாலும் பயிற்சிப் போட்டியில் பந்து வீச்சில் அவர் குறைவாக ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.
எனவே, அவரை அணியில் சேர்க்கும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு தராமல் இருப்பதே நல்லது. அப்படி இல்லை என்றாலும் கூட அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ் ஆகிய மூவரில் அன்றைய போட்டியின் தேவைக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.