மும்பை: டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று இந்திய அணி வீரர்கள் மும்பையில் திறந்தவெளி பேருந்தில் வெற்றிப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடியுள்ள மரைன் ட்ரைவ் பகுதியில் ஹர்திக் பாண்டியாவின் பெயரை எழுப்பி கோஷம் எழுப்பி வருகின்றனர்.
ஐபிஎல் தொடருக்கு முன்பாக மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். இதன் காரணமாக மும்பை அணி ரசிகர்கள் மற்றும் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சோசியல் மீடியாவில் மட்டுமல்லாமல், மைதானங்களிலும் ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் எதிர்பார்க்காத அளவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று எதனை செய்தாலும், ஹர்திக் பாண்டியாவால் ரசிகர்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்டோர் கூட ரசிகர்களிடம் நேரடியாக கேட்டுக் கொண்ட போதும் ஹர்திக் பாண்டியாவை கிண்டல் செய்வதில் இருந்து ஒரு சதவிகிதம் கூட பின் வாங்கவில்லை.
மும்பை வான்கடே மைதானத்திலேயே மும்பை அணியின் கேப்டனுக்கு இப்படியொரு எதிர்ப்பு கிளம்பும் என்று அந்த அணியின் உரிமையாளர்களான அம்பானி குடும்பமே எதிர்பார்க்கவில்லை. இதுவே ஹர்திக் பாண்டியாவின் மனநிலையையும் பாதித்ததாக கூறப்பட்டது. ஆனால் மும்பை அணியின் ஜெர்சியை கழற்றிவிட்டு இந்திய அணியின் ஜெர்சியை ஹர்திக் பாண்டியா அணிந்த போது, தரமான கம்பேக்கை கொடுத்தார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பிரச்சனையில் சிக்கிய போது, ஒவ்வொரு முறையும் ஹர்திக் பாண்டியா ஆட்டத்தை திருப்பினார். பேட்டிங்கில் 144 ரன்கள், பவுலிங்கில் 10 விக்கெட்டுகள் என்று ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடுகள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதிலும் இறுதிப்போட்டியில் 16 ரன்களை டிஃபெண்ட் செய்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் மும்பையில் உள்ள மரைன் ட்ரைவ் பகுதியில் வெற்றிப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். திறந்தவெளி பேருந்தில் இந்திய வீரர்களை காண்பதற்காக 5 மணியளவிலேயே ரசிகர்கள் குவிய தொடங்கினர். அதேபோல் வான்கடே மைதானத்திலும் ரசிகர்கள் குவிந்தனர்.
அப்போது வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பலரும் ஹர்திக் பாண்டியாவின் பெயரை சொல்லி கோஷம் எழுப்பினர். எந்த இடத்தில் 40 நாட்களுக்கு முன்பாக ரசிகர்கள் கிண்டல் செய்தார்களோ, அதே மைதானத்தில் ஹர்திக் பாண்டியா தரமான கம்பேக்கை கொடுத்துள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியாவின் ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.